Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெய்டின் 2வது நாள்.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரூ.15.64 கோடி மதிப்பு ஆவணங்கள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீடு மற்றும் அவரது கணவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் சத்யா பன்னீர்செல்வம். இவரது கணவர் பன்னீர்செல்வம் கடந்த 2011 - 16 இடைப்பட்ட அதிமுக ஆட்சிக் காலத்தில் பண்ருட்டி நகராட்சித் தலைவராக பதவி வகித்து இருக்கிறார். அப்போது நகராட்சி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.20 லட்சம் வரை மோசடி செய்ததாக பன்னீர்செல்வம் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக பன்னீர்செல்வம், பண்ருட்டி முன்னாள் நகராட்சி ஆணையர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கடந்த 27 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

2nd day raid at Panruti former ADMK MLA Sathya Panneerselvams house

இந்த நிலையில் நேற்று காலை முதல் பன்னீர்செல்வத்துக்கு தொடர்புடைய இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ரெய்டில் ஈடுபட்டு வருகிறார்கள். பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீடு, சென்னை பெரம்பூர் ஜவஹர் நகர் தியாகராஜன் வீதியில் இருக்கும் உள்ள பண்ருட்டி முன்னாள் நகராட்சி ஆணையர் பெருமாளின் வீடு, இவர்களின் பினாமியாக கூறப்படும் பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த மோகன்பாபு, பண்ருட்டி கந்தன்பாளையம் பகுதியை சேர்ந்த பெருமாள், பண்ருட்டி திருவதிகை கடலூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பிரசன்னா, பண்ருட்டி இந்திரகாந்தி சாலை பகுதியில் வசிக்கும் செந்தில் முருகன் உள்ளிட்டோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையை தொடங்கியது.

கடலூர் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு கூடுதல் எஸ்பி தேவநாதன் தலைமையில் 6 குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டு சோதனை தீவிரமாக நடைபெற்றது. நேற்று பல மணி நேர சோதனையில் முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள், நிலம் மற்றும் மனை சொத்து ஆவணங்கள் என ரூ.15.64 கோடி மதிப்பிலான 47 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதை அறிந்து சிதம்பரம் எம்எல்ஏவும் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பாண்டியன், புவனகிரி எம்எல்ஏவும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான அருண்மொழித்தேவன் மற்றும் ஏராளமான அதிமுகவினர் அங்கு சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் நடத்தப்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதில், "கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் அவர்கள் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்றும் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+