விசிக கொடிக்கம்பம் உடைப்பு..வெளியான புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை! உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
கடலூர்: கடலூரில் இரு சமூக இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் விசிக கொடிக் கம்பம் உடைக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் வெளியானது. இதனையடுத்து வன்னியர் சங்க நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாமக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், அந்த பெண் எந்த கட்சியும் எங்களுக்கு வேண்டாம் என பாமக கொடிக்கம்பத்தையும் தான் உடைத்துள்ளார். ஆனால் விசிக கொடிக் கம்பம் மட்டுமே உடைக்கப்பட்டதாக புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கும் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த செல்லதுரை தீபாவளிக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்த பொழுது தனது சித்தப்பாவின் மகள் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.

தனது தம்பியோடு பத்திரிக்கை வைத்துவிட்டு உடையூர் வழியாக தனது ஊருக்கு வந்து கொண்டிருந்த பொழுது ஆறு இளைஞர்கள் வழித்தடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் போக வேண்டும் எங்களுக்கு வழிவிடுங்கள் என்று செல்லதுரை கேட்ட நிலையில் வேண்டுமானால் வயலில் இறங்கி நடந்து போங்கள் என்று ஏளனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் மீண்டும் வழி கேட்கவே அவர்கள் ஆறு பேரும் சேர்ந்து செல்லதுரையை மிகக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். அடித்தவர்களில் ஒருவன் அலைபேசியில் செய்தி சொல்லி பத்துக்கும் மேற்பட்டவர்களை அழைத்து, அவர்களும் சேர்ந்து நின்று தாக்க பலத்த காயங்களோடு முகத்திலும் உடலிலும் ரத்தம் வழிய செல்லத்துரை மூர்ச்சையாகியிருக்கிறார்.
மேலும் அவரை தாக்கிய வீடியோவையும் வெளியிட்டனர். இதனால் அந்த பகுதியில் சாதி ரீதியான மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தற்போது இளைஞர்களின் தாக்குதலில் படுகாயம் அடைந்த செல்லத்துரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஊரின் மையப்பகுதியில் இருந்த கொடிக்கம்பங்களை அடித்து உடைத்தனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் உடைக்கப்பட்டது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை சாதிய வன்மத்துடன் அடித்து உடைத்ததாக சமூக வலைதளங்களில் அதிகமாக அந்த புகைப்படம் வீடியோ பகிரப்பட்டது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை உடைத்ததை கண்டித்து புவனகிரியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நிர்வாகி ஒருவர் வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள் மொழியின் தலையை வெட்டி எடுப்போம் என பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாமக நிறுவனரான ராமதாஸும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதனிடையே செல்லதுரை தாக்குதல் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மஞ்ச கொல்லை கிராமத்தில் பெண்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்தை மட்டும் உடைக்கவில்லை பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பத்தையும் தான் உடைத்து உள்ளார்கள். மேலும் தங்களுக்கு எந்த கட்சியும் தேவையில்லை என அனைத்து கொடிக் கம்பங்களையும் தான் உடைத்துள்ளார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் மட்டும் தான் உடைக்கப்பட்டது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தான் மோதலுக்கு காரணம் என கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். இந்நிலையில் இரு கட்சி கொடிக் கம்பங்களும் உடைக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications