கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு.. திமுக எம்பி ரமேஷுக்கு அக். 27ஆம் வரை நீதிமன்ற காவல்
கடலூர்: முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம்பி ரமேஷுக்கு அக். 27ஆம் வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கக் கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலூர் மாவட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். பணிக்கன் குப்பம் கிரமத்தில் அமைந்துள்ள கடலூர் திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
கடந்த மாதம் 19ஆம் தேதி வேலைக்குச் சென்றவர் கோவிந்தராஜ், அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கோவிந்தராஜின் மகனுக்கு தொலைப்பேசி மூலமாகத் தொடர்பு கொண்ட ரமேஷின் உதவியாளர் கோவிந்தராஜ் உயிரிழந்து விட்டதாகவும் அவரது உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சந்தேக மரணம்
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கோவிந்தராஜின் உடலை அவரது மகன் சென்று பார்த்துள்ளார். அப்போது அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர், கடலூர் திமுக எம்பி ரமேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மனு அளித்தார்.

பிரேதப் பரிசோதனை
மேலும், இது தொடர்பாக அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கோவிந்தராஜின் உடலில் ரத்தக் காயங்கள் மற்றும் அடித்துத் துன்புறுத்தியதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் தனது தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் உடலை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜிப்மர் மருத்துவர்கள் கோவிந்தராஜின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர்.

சிபிசிஐடி போலீசார்
மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கும் மாற்றப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் கோவிந்தராஜ் அடித்து துன்புறுத்தப்பட்டதாக அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடலூர் திமுக எம்பி ரமேஷ். மற்றும் அவரது தொழிற்சாலையில் உள்ள நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், ரமேஷ் தவிர மற்ற 5 பேரை சிபிசிஐடி போலீசால் கைது செய்யப்பட்டனர்.

எம்பி சரண்
இந்தச் சூழலில் தலைமறைவாக இருந்த கடலூர் திமுக எம்பி ரமேஷ் நேற்று முன்தினம் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சிகள் தன் மீது அதரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும் அவற்றைப் பொய் என நிரூப்பிபேன் என்றும் எம்பி ரமேஷ் அறிக்கையும் வெளியிட்டார். இன்று காலை அவர் கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

4 மணி நேரம் விசாரணை
அப்போது, சிபிசிஐடி போலீஸார் ரமேஷ் எம்.பியை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இருப்பினும், நீதிபதி பிரபாகர், இன்று மதியம் 1 மணி முதல் நாளை மதியம் ஒரு மணி வரை ஒரு நாள் மட்டும் ரமேஷை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்த அனுமதி அளித்தனர். இருப்பினும், வெறும் 4 மணி நேரம் மட்டுமே அவரிடம் விசாரணை நடத்தி சிபிசிஐடி போலீசார் இன்று மாலை கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தினர்.

15 நாட்கள் நீதிமன்ற சரண்
இதையடுத்து முந்திரி ஆலை தொழிலாளி உயிரிழந்த வழக்கில் கடலூர் திமுக எம்.பி. ரமேஷுக்கு 15 நாட்கள், அதாவது வரும் அக்.27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications