பிரதர்.. ஒரு டீ சாப்பிடலாம் வாங்க! நள்ளிரவில் லாரிகளை மடக்கிய போலீசார்! நெகிழ்ந்து போன டிரைவர்கள்
கடலூர்: பனிமூட்டம் காரணமாக சாலையில் வாகனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணித்து வருகின்றன. இந்நிலையில், ஓட்டுநர்களுக்கு நீண்ட தூர பயண களைப்பை போக்கும் விதமாக காவல்துறையினர் தேநீர் விநியோகித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்துகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. மோசமான சாலைகள், போதுமான அளவு எச்சரிக்கை பலகைகள் இல்லாதது இப்படி பிரதான காரணங்கள் இருந்தாலும், ஓட்டுநர்களின் சோர்வும் கூட விபத்துகளுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றன. நீண்ட சாலையில் வேகமாக கடந்து செல்லும் வாகனங்களையும், மரங்களையும் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் நிச்சயம் சலிப்பு தட்டிவிடும்.

இந்த அலுப்பை போக்கவே பெரும்பாலும் கனரக வாகனங்களில் இரண்டு அல்லது மூன்று பேர் பயணிப்பார்கள். குறிப்பிட்ட தூரம் வரை ஒருவரும், அதன் பின்னர் மற்றொருவரும் மாறி மாறி வாகனத்தை இயக்குவார்கள். மட்டுமல்லாது வாகனங்களில் ஏதேனும் பிரச்னை வந்தாலும் கூட இருவரும் சேர்ந்து அதை சரி செய்துவிடுவார்கள்.
இப்படியெல்லாம் இருந்தாலும் கூட விபத்து எதிர்பாராத விதமாக நடந்து விடுகிறது. இன்று காலை பனிமூட்டம் காரணமாக பல பகுதிகளில் சிறிய அளவில் விபத்துக்கள் நடந்திருக்கின்றன. சீர்காழியில் தனியார் பேருந்து சர்வீஸ் ரோட்டில் சென்றுக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையை விட்டு இறங்கி சேற்றில் சிக்கியுள்ளது. ராணிப்பேட்டையில் அரசு பேருந்து ஒன்று கார்கள் மீது மோதியுள்ளது. எனினும் பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை.
எனவே இதுபோன்ற விபத்துக்களை தடுக்க கடலூர் போலீசார் புது முயற்சிகளை கையில் எடுத்திருக்கின்றனர். அதாவது, ராமநத்தம் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தி அதன் ஓட்டுநர்களுக்கு தேநீரை விநியோகித்துள்ளனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு ஓட்டுநர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அதேபோல சாலைகளில் மாடுகள் நடமாடுவதை தவிர்க்கவும், எச்சரிக்கை பலகைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
இது குறித்து ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், "இரவு நேரங்களிலும், விடியற்காலை நேரங்களிலும் விபத்துக்கள் அதிகம் நடக்கும். உடல் சோர்வும், தூக்க கலக்கமும்தான் இந்த விபத்திற்கான காரணமாகும். நாங்களும் நீண்ட தூரம் வாகனத்தை இயக்கி வருகிறோம். தற்போது போலீசார் டீ கொடுத்திருக்கிறார்கள். இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.
டெல்லியிலும் சில நாட்களுக்கு முன்னர் காவல்துறையினர் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். டெல்லியை பொறுத்த வரையில் தற்போது குளிர் அதிகரித்திருக்கிறது. விரைவில் மைனஸை எட்டிவிடும் என வானலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. பனிமூட்டம் பார்வை திறனை பெரிதும் குறைத்திருக்கிறது. எனவே டெல்லியிலும் சில சிறிய விபத்துக்கள் நடந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications