நாய் கடித்த விவகாரம்.. "போராட்டம் வெடிக்கும்" - பொங்கிய தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ - பின்னணி என்ன?
கடலூர் : பண்ருட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் தரக்குறைவாக பேசியதாகக் கூறி தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ சிவக்கொழுந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
முன்னாள் எம்.எல்.ஏ சிவக்கொழுந்துவின் பேரனை நாய் கடித்த நிலையில், சிறுவனை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர், அலட்சியமாக நடந்துகொண்டதோடு, ஒருமையில் பேசியதாகவும் குற்றம்சாட்டி முன்னாள் எம்.எல்.ஏ சிவக்கொழுந்து, மருத்துவரின் அறையை முற்றுகையிட்டனர்.

தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஜவகர் தெரு பகுதியில் தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மகள் சுகன்யாவின் நான்கு வயது மகன் நிவின் கன்னத்தில் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சிறுவன் நிவினை அவரது பெற்றோர்கள் மற்றும் தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவர்
அப்போது பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவர் விஜயலட்சுமி என்பவர் சிறுவன் நிவின் கன்னத்தில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்து விட்டு பின்பு தன்னிடம் அழைத்து வருமாறு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் சுத்தமாக வந்து மருத்துவரை பார்க்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல என்று தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்ணா போராட்டம்
அப்போது மருத்துவர் விஜயலட்சுமி, சிவக்கொழுந்து பேசியதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காமல் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவகொழுந்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் மருத்துவர் விஜயலட்சுமி அறையை முற்றுகையிட்டபடி மருத்துவமனையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் எம்.எல்.ஏ எச்சரிக்கை
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து சம்பந்தப்பட்ட மருத்துவர் விஜயலட்சுமி மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பண்ருட்டி அரசு மருத்துவமனையை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனைப்படி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications