மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டீங்களே! கள்ளக்குறிச்சி கலவர கும்பல் போலீசிடம் மாட்டியது எப்படி?
கடலூர்: கள்ளக்குறிச்சியில் கலவரம் செய்த கும்பல், இதை தூண்டிவிட்ட கும்பலை சேர்ந்த பலர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் முதல் 2 நாளில் 300 பேரை போலீசார் கைது செய்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கலவரக்காரர்கள் செய்த சிறிய தவறை வைத்து போலீஸ் அவர்களை தட்டி தூக்கி இருக்கிறது. ஆம் போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல் சொந்த செலவில் சூனியம் வைத்து.. ரோட்டில் அமைதியாக போன சனியனை தூக்கி பனியனுக்குள் போட்டுக்கொண்டுள்ளனர். அப்படி என்ன நடந்தது?
கள்ளக்குறிச்சியில் கலவரம் செய்த எல்லோரையும் கைது செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. போராட்டம் செய்தவர்களை கண்டுபிடியுங்கள். தனிப்படை அமையுங்கள். போராட்டக்காரர்களை கைது செய்தால் மட்டும் போதாது

கலவரம்
அவர்கள் கையில் சட்டங்களை எடுக்க கூடாது. போலீஸ் யார் கட்டுப்பாட்டிலும் இருக்க கூடாது. நீங்கள் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். நான் டிவியில் அனைத்தையும் பார்த்தேன். இந்த கலவரம் திட்டமிட்டு செய்யப்பட்ட குற்றம். இதை போலீசார் சாதாரணமாக விட்டுவிட கூடாது. இதில் எடுக்கப்படும் ஆக்சன் எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும், என்று உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் கூறியது.

எஸ்ஓஎஸ்
இதையடுத்து தற்போது வரை 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 150 பேர் வரை ரிமாண்ட் செய்யப்பட்டு உள்ளனர். வாட்ஸ் ஆப் அட்மீன்கள் என்று கிட்டத்தட்ட 10 பேர் வரை கைதாகி உள்ளனர். இந்த கலவரம் நடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிட்டத்தட்ட 5000க்கும் அதிகமான நபர்கள் கலவரம் செய்ததாக போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் 100 போலீசார் மட்டுமே முதலில் சம்பவம் இடத்தில் இருந்துள்ளனர். உடனே வாக்கி டாக்கியில் எஸ்ஓஎஸ் அனுப்பி உள்ளனர்.

போலீஸ்
உடனே போலீஸ் படை வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக போலீசார் அதிகமாக வந்துள்ளனர். வஜ்ரா போலீஸ் வாகனமும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. போலீசார் அதிகம் வந்த பின்புதான்.. பள்ளியை மொத்தமாக சேதம் செய்துவிட்டு அங்கிருந்து கலவர கும்பல் எஸ்கேப் ஆகி இருக்கிறது. இந்த நிலையில்தான் பல தெருக்களுக்கு போலீசார் வாகனங்களில் சென்று கலவர கும்பலை தேடி உள்ளனர்.

துரத்தி பிடித்தனர்
ஆனால் யாரை கேட்டாலும் நாங்க கலவரத்திற்கு போகவில்லை என்று அங்கு இருந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். அதில் ஒன்றாக நடந்து சென்ற 5 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர்களும் கலவரத்திற்கு செல்லவில்லை என்று கூறியுள்ளனர். அப்போது அவர்களின் போனை பார்த்ததில் அதில் கலவர இடத்தில் அவர்கள் போட்டோ எடுத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் வாட்ஸ் ஆப்பில் ஸ்டோரியும் வைத்து இருக்கிறார்கள்.

30 கிமீ டோல் பிளாசா
அதாவது மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டீங்களே என்று சொல்லும் அளவிற்கு கலவரம் செய்துவிட்டு அதற்கான ஆதாரத்தை இவர்கள் போனிலேயே வைத்து உள்ளனர். அதேபோல் அவர்கள் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பிய நபர்களையும் தேடி கண்டுபிடித்து போலீஸ் கைது செய்துள்ளனர். இதே முறைப்படி அங்கிருந்து 30 கிமீ தூரத்தில் கடலூர் அருகே இருந்த டோல் கேட் ஒன்றில் போலீசார் ஒரு கும்பலை பிடித்துள்ளனர்.

மக்கள் உதவி
இவர்களும் போனில் செல்பி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதெல்லாம் போக கள்ளக்குறிச்சி கிராமத்திலேயே மக்கள் சிலரும் போலீசுக்கு உதவி இருக்கிறார்கள். கும்பல் எங்கே எல்லாம் சென்றது என்று போலீசாருக்கு அங்கு இருந்த வயதானவர்கள் பிடித்து கொடுத்துள்ளனர். சிலர் இதில் கரும்பு கொல்லையில் ஒளிந்து கொண்டனர். அவர்களை அங்கு இருந்த முதியவர்கள் பிடித்து கொடுத்ததாக போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது.. இதை பயன்படுத்தியே 350 பேரை போலீஸ் கைது செய்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications