போராடுங்க தப்பில்லை! அதுக்காக என்.எல்.சி.யை மூடச் சொல்வதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வைத்த ட்விஸ்ட்!
கடலூர்: என்.எல்.சி.யை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு போதும் ஏற்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி.தமிழ்நாட்டுக்கு தேவையா? என்றும் கடலூர் மாவட்டத்திலிருந்து அதனை வெளியேற்றாமல் ஓயமாட்டேன் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆக்ரோஷம் காட்டி வரும் நிலையில், பாலகிருஷ்ணன் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கோரிக்கைகள் இருக்கும் அதனால் அதனை நிறைவேற்றக் கோரி போராடலாம் என்றும் என்.எல்.சி.க்கு எதிராக போராட்டம் நடத்துவதை தவறு என்று சொல்லவில்லை எனவும் கூறியிருக்கிறார். ஆனால் அதே வேளையில் சுத்தமாக என்.எல்.சி.யை இழுத்து மூட வேண்டும் என்பதை ஏற்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் நலன், விவசாயத்தை பாதுகாப்பது என்ற கோணத்தில் அன்புமணி என்.எல்.சி. விவகாரத்தை பார்க்கும் நிலையில் தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நலன் என்ற கோனத்தில் பாலகிருஷ்ணன் என்.எல்.சி. விவகாரத்தை பார்க்கிறார்.
நெய்வேலி நிறுவனத்தை மூடிவிட்டால் அதன் பிறகு ஏற்படும் பாதிப்புக்கு யார் பதில் சொல்வது என்று வினவிய பாலகிருஷ்ணன், அது சமூகத்தில் பல நெருக்கடிகளை உருவாக்குவதோடு தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தடைக்கல்லாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனத்தை மூடச் சொல்வது நியாயமான கோரிக்கையா என பாமகவுக்கு சூசகமாக கேள்வி எழுப்பிய பாலகிருஷ்ணன், என்.எல்.சி. நிறுவனத்துக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதை உறுதி செய்தார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறினார். இதில் ஹைலைட் என்னவென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதாகும்.












Click it and Unblock the Notifications