என்எல்சி விவகாரம்..வளையமாதேவி கிராமத்துக்கு சென்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் கைது
என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வளையமாதேவி கிராமத்துக்கு சென்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழி தேவனை காவல்துறையினர் கைது செய்தனர்
கடலூர்: காவல்துறையினரின் தடையை மீறி வளையமாதேவி கிராமத்திற்கு வந்த புவனகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எம்எல்ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் உருவானது. வளையமாதேவி கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நெய்வேலி அருகேயுள்ள ஆணைவாரி, எரும்பூர், காரிவெட்டி, வளையமாதேவி, கத்தாழை போன்ற பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தது. இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராமத்திற்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை நேற்று தொடங்கியது. இதில் முதற்கட்டமாக வளையமாதேவி கிராமத்தில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களின் எல்லைகளில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடைபெற்றது. இதற்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடத்தினர். மேலும், நாளை முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாளைய தினம் கடைகள் வழக்கம் போல திறந்திருக்கும் என்றும், பேருந்துகள், வாகனங்கள் வழக்கம் போல இயங்கும் என்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புவனகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் இன்று வளையமாதேவி கிராமத்திற்கு வந்தார். அங்கு நிலங்களை கொடுத்த விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் பேசினார். அப்போது அங்கு வந்த போலீசார் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ.வை திடீரென கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் பொதுமக்களை சந்திக்க தான் வந்தேன். போராட்டம் நடத்த வரவில்லை. என்னை ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். இதற்கு போலீசார் சரியான பதிலளிக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications