2வது கல்யாணம்.. தாலியோடு ஜாலியாக காத்திருந்த கணவன்.. மனைவி சர்ப்ரைஸ் என்ட்ரி.. தெறித்து ஓடிய ஜோடி
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மனைவிக்கே தெரியாமல் விவாகரத்து பெற்று காதலியுடன் 2 வது திருமணத்திற்கு தயாரான கணவன், திருமணத்தில் மனைவியை கண்டு அதிர்ச்சியில் ஓட்டம் பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. 3 வருட காதல், இடையில் கிடைத்த காவலர் பணி, பணிக்கு சென்ற இடத்தில் பெண் காவலருடன் காதல்.. ஆனால் முதல் காதலியையும் விட மனம் இல்லாமல் அவரையும் திருமணம் செய்து கொள்கிறார்.
இதில் பெண் காவலருடன் ஏற்பட்ட நெருக்கம் நாளுக்கு நாள் அதிகமான நிலையில், திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் மனைவிக்கே தெரியாமல் , நீதிமன்றத்தில் மோசடி செய்து விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணத்திற்கு தயாரானது போது,திடீரென மனைவி கொடுத்த என்ட்ரியால் ஓட்டம் பிடித்திருக்கிறது திருமணத்திற்கு தயாரான ஜோடி.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் ராம்குமார், இவரும் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சபீதா என்பவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ராம்குமாருக்கு காவலர் பணி கிடைத்த நிலையில், திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் பணி கிடைத்தது. அங்கு தான் காதல் வாழ்க்கைக்கும், சபீதா உடனான திருமண வாழ்க்கைக்கும் ஆப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

காதல்
ராம்குமார் வேலைபார்த்து வந்த காவல் நிலையத்தில், மயிலாடுதுறை மாவட்டம் திருவேற்காடு கிராமத்தைச் சேர்ந்த ரம்யா என்பவரும் காவலராக பணிக்கு சேர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பணிபுரிந்து வந்த நிலையில், பின்பு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி பாணி
இந்த நிலையில் தன்னை நம்பி ஊரில் காத்திருக்கும் காதலியான சபீதாவையும் கைவிட மனம் வரவில்லை. காத்துவாக்குல இரண்டு காதல் பட விஜய் சேதுபதி போல் உலா வந்திருக்கிறார் ராம்குமார். ஆனால் முதல் காதல் ஸ்பெசல் என்பது போல, சபீதாவை 2019ம் ஆண்டு திருமணம் செய்திருக்கிறார்.

தந்தை வீடு
இந்த திருமணத்திற்கு பின்னரும், தனது காதலி ரம்யாவுடன் ராம்குமார் நெருங்கி பழகி வந்தாராம். இதனால் சபீதாவுடனான திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் ரம்யா அவரது தந்தை வீட்டிற்கு சென்றுவிடுகிறார்.

சதி திட்டம்
இதுதான் சரியான தருணம் என காத்திருந்த ராம்குமார், தன் காதலியை கரம் பிடிக்க நினைத்து, மனைவிக்கே தெரியாமல் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ளார். இந்த விவாகரத்திற்காக அவர் நீதிமன்றத்தை ஏமாற்ற தீட்டிய திட்டம் தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றத்தில் மனைவியை பிரிந்து வாழ்வதாக தெரிவித்த ராம்குமார், கடலூரில் இருக்கும் மனைவி, மயிலாடுதுறையில் இருப்பதாக கூறி, மயிலாடுதுறை முகவரியை கொடுத்துள்ளார். நீதிமன்றமும் மயிலாடுதுறை முகவரிக்கே தொடர்ந்து சம்மன் அனுப்பிக் கொண்டே இருந்துள்ளது.

திருமணத்திற்கு தயார்
அந்த முகவரியில் தான் அவர் இல்லையே, அப்புறம் எப்படி ஆஜராக முடியும் என்ற நிலையில், சபீதா நீதிமன்றத்தில் ஆஜராகததால், நீதிமன்றமும் ராம்குமாருக்கு விவாகரத்தும் வழங்கி உள்ளது. இந்நிலையில் தன் காதலியும், பெண் காவலருமான ரம்யா உடன் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தில் உள்ள கோயிலில் இரண்டாவது திருமணத்திற்கு ராம்குமார் தயாராகி உள்ளார்.

திடீரென வந்த மனைவி
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சபீதா , சட்டென்று திருமணம் நடைபெறும் கோயிலுக்கு விரைந்த நிலையில், அங்கு சினிமாவில் காண்பது போல், சரியாக திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் உள்ளே புகுந்து, தாலி கட்டுவதை தடுத்து நிறுத்தினார். இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்காத ராம்குமாரும், ரம்யாவும் செய்வதறியாது நிற்க, சபீதா அங்கு ரகளையில் ஈடுபட்டார். இதில் திருமண ஜோடிகள் தெரித்து ஓடி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளன. இருவரும் காவலர்கள் என்பதால் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க போலீசார் அறிவுறுத்தினர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தனக்கு நேர்ந்த அநீதிக்கு நீதி வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார். இரு தரப்பு புகாரையும் பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications