ஓகே.. இதுக்கு மேலே போனால், விளைவுகள் மோசமாக இருக்கும்.. கடலூரில் கொந்தளித்த சீமான்.. என்ன காரணம்?
என்எல்சி நிறுவனம் மேலும் நிலங்களை கையகப்படுத்தினால் போராட்டம் தீவிரமடையும் என சீமான் ஆவேசம்
கடலூர்: என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு எதிராக கடலூர் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிலம் வழங்கியவர்களுக்கு சமமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 1956ம் ஆண்டு நாட்டின் நவரத்தின பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டதுதான் என்எல்சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம். இந்தியா தனது மின்சார தேவைக்கு பெரும்பாலும் அனல்மின் நிலையங்களையே நம்பி இருக்கிறது. எனவே என்எல்சியின் வளர்ச்சியும் கடந்த காலகட்டத்தில் அபரிமிதமாக இருக்கிறது. தற்போது இந்நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 30 கோடி டன் அளவுக்கு நிலக்கரியை உற்பத்தி செய்கிறது.
எனவே நிறுவனம் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2006ம் ஆண்டு இதேபோல விரிவாக்க பணிகளுக்கு நெய்வேலியின் சேத்தியார் தோப்பு பகுதிக்கு உட்பட்ட மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி மற்றும் கரிவெட்டி ஆகிய கிராமங்களிலிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்நிலங்களை கையகப்படுத்தப்பட்டதோடு அந்நிறுவனம் நின்றுவிட்டது. அதன் பின்னர் எந்த விரிவாக்க பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

நிலுவைத்தொகை
இந்நிலையில் இவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலங்களை சமன்படுத்தும் பணிகளை தற்போது என்எல்சி தொடங்கியுள்ளது. இதற்காக ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட நிலங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது. இந்நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "நிலம் கையகப்படுத்தப்பட்டபோது ரூ.6 லட்சம் அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் இந்நிவாரணத் தொகை ரூ.3 லட்சம் கூடுதலாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை இந்த கூடுதல் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை.

போராட்டங்கள்
இதனை வழங்கக்கோரிதான் நாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறோம்" என்று தெரிவிக்கின்றனர். இந்த போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி முழு, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவை அறிவித்திருக்கின்றன. மட்டுமல்லாது இக்கட்சிகளின் சார்பில் கடலூர் மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் கடலூர் மாவட்டம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பெரிய அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும் கூட, இந்த பிரச்னையையடுத்து மேற்கொள்ளப்பட்ட முக்கிய போராட்டமாக இது பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி
இந்நிலையில் இதனை தொடர்ந்து தற்போது நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் இன்று நடைபெற்றிருக்கிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்று பேசியிருந்த சீமான், "ஏற்கெனவே நிலங்களை வழங்கியவர்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டதோ அதே அளவுக்கு இழப்பீடு தற்போது நிலங்களை வழங்கியவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். அதேபோல நிலங்களை வழங்கிய குடும்பங்களில் தலா ஒருவருக்கு என்எல்சியில் வேலை வழங்கப்பட வேண்டும். ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தற்போதுதான் சீரமைக்கப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் புதியதாக எந்த நிலங்களும் கைப்பற்றப்படக் கூடாது.

போராட்டம்
இதனை மீறி நிறுவனத்தை விரிவுபடுத்துகிறோம் என்று கூறி மேலும் புதிய நிலங்களை கையகப்படுத்தினால் போராட்டம் இதை விட பேரெழுச்சியாக நடைபெறும்" என்று கூறியுள்ளார். ஏற்கெனவே பாமக இந்த பகுதியில் போராட்டங்களை அடிக்கடி நடத்தி வருவது என்எல்சி நிர்வாகத்திற்கு பெரிய தலைவலியை உருவாக்கியுள்ளது. இப்படி இருக்கையில், தற்போது நாம் தமிழர் கட்சியும் போராட்டம் குறித்து எச்சரித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications