மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும்.. அந்த கையெழுத்தை போட மாட்டோம்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கடலூர்: மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டத்தை கையெழுத்து போட மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எங்கள் மொழியை அழிக்க ஆதிக்கம் செய்ய நினைத்தால் விட மாட்டோம் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்து போடாததால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கடிதம் எழுதி இருந்தார். இருந்தாலும் தமிழக அரசு தரப்பில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பதில் கடிதம் அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமாக அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் கடலூரில் பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தம்பி அன்பில் மகேஷ் பதவியில் இருக்கும் காலம் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலம். பள்ளிக் கல்வித்துறையை இந்தியாவில் 2வது இடத்திற்கு முன்னேற்றி இருக்கிறார். தமிழ்நாட்டின் கல்வி தரத்தை மத்திய அரசு பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டி இருக்கிறது.
ஒருபுறம் பாராட்டிவிட்டு, இன்னொரு பக்கம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். மத்திய அரசு தரப்பில் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது 43 லட்சம் மாணவர்களுக்கு செலவு செய்ய வேண்டிய தொகை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், நிதி கொடுக்க மறுக்கிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கை என்பது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் வேட்டு வைக்கிற கொள்கை. எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் எதிரி அல்ல. ஆனால் எந்த மொழியை திணிக்க நினைத்தாலும், நாங்கள் எதிர்ப்போம். இந்தியை திணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை. அது மாணவர்களை பள்ளியில் இருந்து துரத்தும் கொள்கை.
3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தி மாணவர்களை வடிகட்ட பார்க்கிறார்கள். 9 முதல் 12 வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். அதன்பின் கல்லூரிகளில் சேர்வதற்கு கூட தேசிய அளவில் தேர்வு நடத்துகிறார்கள். 10 முதல் பட்டப்பிடிப்பு வரை படிப்பை தொடர விரும்பாத மாணவர்கள், அவர்களாகவே விலகலாம் என்று தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம். இந்த திட்டத்தில் கையெழுத்து போட்டால் மட்டுமே ரூ.2,152 கோடி தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்கும். ஆனால் ரூ.10 ஆயிரம் கோடி நிதியளிப்பேன் என்று சொன்னாலும், கையெழுத்து போட மாட்டோம். இந்த நிதிக்காக கையெழுத்து போட்டால் 2 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடுவோம்.
அந்த பாவத்தை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒருபோதும் செய்ய மாட்டான். இந்தி மொழி நமக்கு எதிரி அல்ல. அதனை யார் விரும்புகிறார்களோ அவர்கள் படிப்பதை தமிழ்நாடு ஒருபோதும் தடுத்தது கிடையாது. தடுக்க போவதும் கிடையாது. ஆனால் இந்தியை திணித்தால் தமிழர் என்றொரு இனம் உண்டு.. தனியே அவருக்கு குணமுண்டு என்பதை தமிழ்நாடு காட்டிவிடும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications