திடீரென்று அருள்வந்து சாமியாடிய பெண்.. காங்கிரஸ் வேட்பாளர் - அமைச்சர் கணேசன் செய்ததை பாருங்க!
கடலூர்: கடலூர் லோக்சபா தொகுதி பிரசாரத்தின்போது காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் மற்றும் அமைச்சர் கணேசன் ஆகியோரின் பிரசார வாகனம் முன்பு திடீரென்று பெண் ஒருவர் அருள் வந்து சாமியாடி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் ஜுன்ல 4ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது.

இதனால் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நான்கு முனை போட்டி உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் களத்தில் உள்ளனர். இதுதவிர சுயேச்சைகளும் போட்டியில் இருக்கின்றனர்.
கடலூர் லோக்சபா தொகுதியை பொறுத்தமட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பல் சிவக்கொழுந்து களமிறங்கி உள்ளார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். நாம் தமிழர் சார்பில் மணிவாசகம் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.
இந்நிலையில் தான் இன்று கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் மற்றும் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கடலூர் தொகுதிக்குட்பட்ட வேப்பூரில் தீவிர பிரசாரம் செய்தனர். இந்த வேளையில் ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தி விஷ்ணு பிரசாத் பேசினார். அப்போது, ‛‛தமிழகத்தில் ‛இந்தியா' கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும். மோடிக்கு வாக்களித்தால் மகளிர் உரிமைத்தொகையை நிறுத்திவிடுவார். ரேஷன் கடை சலுகைகள் கிடைக்காது. இலவச பேருந்து திட்டமும் நிறுத்தப்படும்'' என்றார்.
இந்த சமயத்தில் திடீரென்று ஒரு பெண் அருள் வந்து அவர்களின் பிரசார வாகனம் முன்பு ஆடினார். இதனை பிரசார வாகனத்தில் இருந்து பார்த்த காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் மற்றும் அமைச்சர் கணேசன் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ஒன்றும் பேசாமல் நின்ற நிலையில் திடீரென்று கூட்டத்தில் இருந்து வந்தவர் சாமியாடிய பெண்ணை அங்கிருந்து இழுத்து சென்றார்.
இதனால் வேப்பூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு காங்கிரஸ் வேட்பாளர் திருப்பாக்கம், மலையனூர், எஸ் புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, ‛‛அதிமுகவும், பாஜகவுக்கும் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது. இதனால் ‛இந்தியா' கூட்டணியை ஆதரிக்க வேண்டும்'' என அவர்கள் வாக்கு சேகரித்தனர்.












Click it and Unblock the Notifications