சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர்.. 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு நாட்டிலிருந்து மாவோயிசம், நக்சலிசம் ஒழிக்கப்படும் என மத்திய அரசு உறுதியேற்றிருக்கிறது. எனவே மாவோயிஸ்டுகளை தேடி தேடி பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வருகின்றனர்.

இன்று சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டம் கரியாபாத்தில் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மனோஜ் எனும் மோடம் என்பவர் உட்பட 10 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ராய்ப்பூர் சரக காவல் ஆய்வாளர் ஜெனரல் அம்ரேஷ் மிஸ்ரா இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
மைன்பூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட வனப்பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது இந்த மோதல் ஏற்பட்டதாக மிஸ்ரா தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "சிறப்பு அதிரடிப்படை, கோப்ரா மற்றும் மாநில காவல்துறைப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
கரியாபந்தில் பத்து மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்ட நிலையில், நாராயண்பூர் மாவட்டத்தில் 16 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். சரணடைந்த 16 பேரும் கீழ்மட்ட உறுப்பினர்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.
மறுபுறம் என்கவுன்டர் மூலம் கொலைகள் நடத்தப்படுவது ஏற்க முடியாது என்று இடதுசாரி அரசியல் தலைவர்கள் கூறியிருக்கின்றனர். மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு அரசை தொடர்ந்து அழைப்பதாகவும், ஆனால் அதை ஏற்காமல் துப்பாக்கிச்சூடு நடைபெறுவதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என சிபிஐ, சிபிஎம், சிபிஎம்(எம்-எல்) உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்த என்கவுன்ட்டர் குறித்து தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அமித்ஷா, "சத்தீஸ்கரில், சிஆர்பிஎஃப் (CRPF) கோப்ரா கமாண்டோக்கள், சத்தீஸ்கர் காவல்துறை, மற்றும் டிஆர்ஜி (DRG) ஆகியோர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ₹1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட சிசிஎம் மோடம் பாலகிருஷ்ணா என்கிற மனோஜ் உட்பட 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மீதமுள்ள நக்சலைட்டுகள் குறித்த நேரத்தில் சரணடைய வேண்டும். சிவப்பு பயங்கரவாதம் மார்ச் 31-ம் தேதிக்குள் முழுமையாக ஒழிக்கப்படுவது உறுதி" என கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications