சபாஷ்.. தேசிய பாதுகாப்பு அகாடமி நுழைவு தேர்வு.. முதல் ஆண்டே 1.78 லட்சம் பெண்கள் விண்ணப்பம்
டெல்லி: என்டிஏ எனப்படும் தேசியப் பாதுகாப்பு அகாடமி நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு முதல் பெண்களும் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு மட்டும் சுமார் 1.78 லட்சம் பெண்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
என்டிஏ எனப்படும் தேசியப் பாதுகாப்பு அகாடமி நுழைவுத் தேர்வைப் பெண்கள் எழுதக் கடந்த பல ஆண்டுகளாகவே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கைத் தொடர்ந்து இந்த ஆண்டு என்டிஏ தேர்வைப் பெண்களும் எழுத மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

1.78 லட்சம் பெண்கள்
வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்வில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 1.78 லட்சம் பெண்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஆண்டு தேசியப் பாதுகாப்பு அகாடமியின் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு அனுமதி அளித்த முதல் ஆண்டே இத்தனை பெண்கள் விண்ணப்பித்துள்ளது ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

பாலின சமத்துவம்
இது தொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை என்டிஏ தேர்வுக்கு சுமார் 570,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, அவற்றில் 178,000 பெண்கள்" என்று தெரிவித்தார். இது ராணுவத்தில் சமத்துவத்தை நோக்கிச் செல்லும் முதல்படி என சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனன்யா கூறுகையில், "என்டிஏ தேர்வில் பெண்களை அனுமதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு முக்கியமானது. அந்த உத்தரவுக்குப் பின்னரே என்னால் தெளிவான முடிவை எடுக்க முடிந்தது" என்று தெரிவித்தார்.

ராணுவ ஜெனரல் நரவனே
ராணுவத் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனேவும் நேற்று இதனை வரவேற்றுப் பேசியிருந்தார். பாதுகாப்புப் படையில் பாலின சமத்துவத்திற்கான முதல் படி இது என்றும் நரவனே கூறினார். மேலும் வரும் காலத்தில் தனது பதவியை நிச்சயம் பெண் ஒருவர் அலங்கரிப்பார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆண்களை விடப் பெண் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று தான் நம்புவதாக ராணுவ தளபதி கூறினார்.

பொதுநல வழக்கு
முன்னதாக தேசியப் பாதுகாப்பு அகாடமி நுழைவுத் தேர்வில் பெண்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாமல் இருந்தது. இது ஆண்களுக்கு மட்டுமான தேர்வு என்றும் இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்கை முடிவு என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இருப்பினும், இது பாலின சம உரிமைக்கு எதிரானது என்றும் பெண்களுக்கான உரிமையை இது மறுக்கிறது என்றும் கூறி குஷ் கால்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடுத்து இருந்தார்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அப்போது மத்திய அரசு , ராணுவத்தில் சேர்வதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. அதில் ஒரு வழிதான் தேசியப் பாதுகாப்பு அகாடமி தேர்வு. என்டிஏ தேர்வில் ஆண்களை மட்டும் அனுமதிப்பதால் அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் எதுவும் ராணுவத்தில் அவர்கள் இணையும் போது வழங்கப்படாது. பணியில் அவர்களுக்கு இதனால் வேகமான முன்னேற்றம் அல்லது பணி உயர்வு வழங்கப்படாது. அதனால் இது அடிப்படை உரிமை மீறல் கிடையாது என்று வாதிட்டது. இருப்பினும், இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் இது இந்தியச் சட்ட விதி 14, 15, 16 மற்றும் 19க்கு எதிரானது என்று கூறி தேசியப் பாதுகாப்பு அகாடமி நுழைவுத் தேர்வைப் பெண்களும் எழுத அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications