2 நாட்கள்.. 2 மாநிலங்கள்.. ம.பி, சட்டீஸ்கரில் பாஜக நிகழ்த்திய அதிரடி.. கலங்கிப் போன காங்கிரஸ்!
வடஇந்தியாவில் இரண்டு காங்கிரஸ் மாநிலங்களில் மத்திய பாஜக அரசு அடுத்தடுத்து அதிரடியை நிகழ்த்தி வருகிறது.
டெல்லி: வடஇந்தியாவில் இரண்டு காங்கிரஸ் மாநிலங்களில் மத்திய பாஜக அரசு அடுத்தடுத்து அதிரடியை நிகழ்த்தி வருகிறது. மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது, இன்னொரு பக்கம் சட்டீஸ்கரில் முதல்வருக்கு நெருக்கமானர்களின் வீடுகளில் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது.
Recommended Video
மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழும் நிலையில் இருப்பதுதான் தற்போது தேசிய அளவில் தலைப்புச் செய்தி. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக கமல் நாத் ஆட்சி அமைத்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. அங்கு காங்கிரஸ் கூட்டணிக்கு 120 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.
அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 113 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு ஆதரவு தரும் பகுஜன் சமாஜ் கட்சியில் 2 எம்எல்ஏக்களும், சமாஜ்வாதி கட்சியில் ஒரு எம்எல்ஏவும், நான்கு சுயேட்சைகளும் உள்ளனர்,

என்ன மெஜாரிட்டி
அங்கு மெஜாரிட்டி பெற 116 எம்எல்ஏக்கள் தேவை. வெறும் 4 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து அணி மாறினால் மொத்தமாக ஆட்சி கவிழும். பாஜகவிற்கு அங்கு 107 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. 2 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தங்கள் கட்சியை சேர்ந்த 7 எம்எல்ஏக்களை பாஜகவினர் கடத்தி வைத்து இருக்கிறார்கள். அவர்களை வைத்து ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுகிறார்கள் என்று மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

காங்கிரஸ் புகார்
காங்கிரஸ் கட்சியின் புகாரின்படி, மொத்தம் 11 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று குர்கானில் உள்ள ஐடிசி ஹோட்டலில் பாஜகவினர் மூலம் கடத்தி வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் 7 பேர் திரும்பி வந்துவிட்டனர். இன்னும் 4 பேர் அந்த ஹோட்டலில் இருக்கிறார்கள். அதேபோல் வேறு 4 மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கர்நாடகாவில் தனி ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

ஆட்சி கவிழும்
கமல்நாத் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாஜக இப்படி செய்கிறது காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. இதனால மத்திய பிரதேசத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழும் நிலை ஏற்படலாம் என்று கூறுகிறார்கள். அதே சமயம் இன்னொரு பக்கம் சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை ஐடி ரெய்டு துரத்தி வருகிறது. அங்கு காங்கிரஸ் கட்சியின் புபேஷ் பாகல் ஆட்சி செய்து வருகிறார்.

மோசம்
இந்த நிலையில் அம்மாநில முதல்வரின் நண்பர்கள், செயலாளர்கள் வீடுகளில் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமான ஐடி ரெய்டு நடந்து வருகிறது. மாநில முதல்வரே தற்போது அங்கு ஐடி ரெய்டு மூலம் குறி வைக்கப்பட்டுள்ளார். அதேபோல் அங்கு, மற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வீடுகளிலும் ஐடி ரெய்டு நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் சட்டீஸ்கர் காங்கிரஸ் கடும் பதற்றத்தில் உள்ளது.

இரண்டு மாநிலம்
அங்கு பல அமைச்சர்கள் இதனால பாஜகவினரிடம் பேசி சமாதானம் செய்ய முயன்று வருகிறார்கள் என்றும் கூறுகிறார்கள். அங்கு ஆட்சி கவிழ வாய்ப்பில்லை. ஆனால் ராஜ்யசபா தேர்தலில் இந்த ரெய்டு காரணமாக அதிரடி மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ராஜ்ய சபா தேர்தலை மையமாக வைத்தே பாஜக இப்படி செய்கிறது என்றும் கூறுகிறார்கள். ஒரே சமயத்தில் இரண்டு காங்கிரஸ் முதல்வர்கள் இப்படி குறி வைக்கப்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications