சூடுபிடிக்கும் 5 மாநில தேர்தல்.. எப்போது நடைபெறும்? தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை
டெல்லி: விரைவில் ராஜஸ்தான், மிசோரம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது.
அடுத்தாண்டு இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த லோக்சபா தேர்தலுக்கு இப்போது முதலே அனைத்து அரசியல் கட்சிகளும் பணிகளை ஆரம்பித்துவிட்டன.

அதேநேரம் அதற்கு முன்னதாக இந்தாண்டு இறுதியில் 5 மாநிலங்களில்- மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இது லோக்சபா தேர்தலுக்கு அரையிறுதியாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் திட்டமிட்டு வருகிறது. மேலும், தேர்தல் குறித்த அறிவிப்பை எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஐந்து மாநிலங்களில் அதற்கு முன்னதாக, தேர்தலைச் சுமூகமாக நடத்துவது குறித்த தேர்தல் ஆணையம் இன்று தனது பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறது. இன்று நாள் முழுக்க நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தேர்தல் விதிகளை நடைமுறைப்படுத்துவது, செலவுகளைக் கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
தேர்தல் ஆணையம் ஏற்கனவே ராஜஸ்தான், மிசோரம், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆரம்பித்துவிட்டது. அதேபோல தெலுங்கானாவிலும் விரைவில் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க உள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மிசோரம் சட்டப் பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அங்கே மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைகிறது.
அடுத்த சில நாட்களில் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று தேர்தல் ஆணையம் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது.












Click it and Unblock the Notifications