பிஎம் கேர்ஸில் 51% விண்ணப்பங்கள் நிராகரிப்பு.. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் தவிப்பு
டெல்லி: கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் (PM Cares)-ல் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிஎம் கேர்ஸ்-க்கு விண்ணபிக்கப்பட்டவர்களில் 51% பேரின் விண்ணப்பங்கள் நிராகரிகப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்று பாதிப்பால் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையுமே இழந்த குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்துக்காக 'பிஎம் கேர்ஸ்' திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திட்டத்தின் நோக்கம் என்பது, பெற்றோர் இல்லாமல் இருக்கும் இளம் பிள்ளைகளின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தையும் கொடுத்து, பராமரித்து அவர்கள் இளைஞர்களாக தங்கள் சொந்த காலில் நிற்கும் வரை அவர்களை வளர்த்து பராமரிப்பதாகும்.

இந்த திட்டம் குழந்தைகளுக்கு நீண்டகாலத்திற்கு தேவைப்படும் பராமரிப்பும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் அவர்களுக்கு அடிப்படை வசதிகள், தங்குமிடம், கல்வி, கல்வி உதவித்தொகை மற்றும் அவர்கள் 23 வயதாகும் பொழுது தொழில் தொடங்குவதற்கு அல்லது எதிர்காலத்திற்கு தேவைப்படும் கணிசமான தொகை மற்றும் அவர்கள் உடல் நலத்தை காக்கும் மருத்துவ காப்பீடு ஆகியவை வழங்கப்படுகிறது.
விரிவாக சொல்வதெனில் இந்த திட்டத்தில் உள்ள சிறுவர் சிறுமிகளின் பெயரில் வைப்பு நிதி ஒன்று தொடங்கப்படும். மேலும், ஆரம்ப கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை இலவசமாக வழங்கப்படும்; அதாவது ஒன்றாவது வகுப்பு முதல் பத்தாவது வகுப்பு வரை குழந்தைகள் இலவசமாக படிக்கலாம்.
மேலும் மாதாந்திர உதவித்தொகை, மருத்துவ உதவி ஆகியவையும் 18 வயதுக்கு மேல் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் உள்ள இளம் பிள்ளைகள் 23 வயதாகும் போது அவர்களுக்கு ரொக்கமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். இந்த ரொக்கத் தொகை நேரடியாக வருபவரின் அஞ்சல் கணக்கில் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும்.
பிஎம் கேர்ஸ் திட்டத்தின் சிறப்பு இதுதுான். ஆனால், இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. தேர்தல் பத்திர நன்கொடையில் பாஜக பெற்றது ரூபாய் 8252 கோடி. ஆனால், பி.எம்.கேர்ஸ் மூலம் ரூபாய் 12,700 கோடி பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்றும், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வழிமுறைகளில் ஒரு பிரதமரே முறைகேடாக பணம் வசூல் செய்த மிகப்பெரிய மோசடி அம்பலமாகியிருக்கிறது எனவும் காங்கரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த திட்டம் குறித்து விமர்சித்து வருகின்றன.
மேலும், "பி.எம்.கேர்ஸ் என்ற நிதி எதற்காக தொடங்கப்பட்டது ? யாருக்காக தொடங்கப்பட்டது ? இதற்கு நன்கொடை வழங்கியவர்கள் யார் ? இதை நிர்வகிப்பவர்கள் யார் ? என்பது எதுவுமே வெளியே தெரியாமல் பூடகமாக மறைக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் பிரதமரின் மேற்பார்வையில் நிதியை அவர் யாருக்கு வழங்க வேண்டுமென்று விரும்புகிறாரோ அதை தன்னிச்சையாக வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது" என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இந்நிலையில் பிஎம் கேர்ஸ் குறித்து மற்றொரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, பிஎம் கேர்ஸ்-க்கு விண்ணபிக்கப்பட்டவர்களில் 51% பேரின் விண்ணப்பங்கள் நிராகரிகப்பட்டிருக்கிறது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 613 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 9,331 மனுக்கள் பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் நிதியுதவி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 32 மாநிலங்களில் 558 மாவட்டங்களில் இருந்து 4,532 விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 4,781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 18 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications