செத்தது 52 இந்தியர்கள்.. இந்து-முஸ்லிம் என பிரிச்சு பேசாதீங்க.. டெல்லி கலவரம் குறித்து அமித்ஷா
டெல்லி: டெல்லி கலவரத்தில் 52 இந்தியர்கள் இறந்துள்ளளார்கள். யாரும் இந்து முஸ்லிம் என பிரிச்சு பேச வேண்டாம் என லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக லோக்சபாவில் இன்று காரசாரமாக விவாதம் நடந்தது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்கள் கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் வெறுப்பு பேச்சு காரணம் என்றும், டெல்லி போலீஸ் வன்முறையை தடுக்காமல் வேடிக்கை பார்த்தது என்றும் குற்றம்சாட்டி பேசினார்கள்.
டெல்லி காவல்துறை உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் அவர் இன்று நடந்த விவாதத்தின் இறுதியில் எதிர்க்கட்சி எம்பிக்களின் பல்வேறு குற்றச்சாட்டுக்ளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார். இந்நிலையில் அமித் ஷா பேசிக் கொண்டிருந்த போது டெல்லி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கலவரத்தை தடுத்தார்கள்
இதையடுத்து லோக்சபாவில் டெல்லி வன்முறை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பிப்ரவரி 25ம் தேதிக்கு பிறகு வகுப்பு வாத கலரவங்கள் நடைபெறவில்லை. இங்கே பலர் டெல்லி போலீஸ் என்ன செய்தது என்று கேட்டார்கள். போலீசார் அப்போது கலவரம் நடந்த பகுதியில் இருந்தனர், போலீசாரும் விசாரணை செய்து ஒரு அறிக்கையை வரும் நாட்களில் சமர்ப்பிப்பார்கள். கலவரம் மற்ற பகுதிகளுக்கு பரவ அனுமதிக்காததற்காக டெல்லி போலீசாரை நான் பாராட்ட விரும்புகிறேன்.

நான் கலந்து கொள்ளவில்லை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. அதில் நான் பங்கேற்றேன். அதில் பங்கேற்பது தொடர்பான எனது நிகழ்ச்சியும் முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. அடுத்த நாள், டிரம்ப் டெல்லிக்குச் சென்றபோது, நான் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை. டெல்லி போலீசாருடன் நிலைமையைக் கண்காணிப்பதில் நான் மும்முரமாக இருந்தேன். "தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை கலவரம் நடந்த பகுதிக்கு சென்று போலீசாரின் மன உறுதியை அதிகரிக்குமாறு நான் கேட்டுக்கொண்டேன்.

யாரும் தப்ப முடியாது
கலவரத்திற்கு நிதியளித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையை ஏற்படுத்திய அனைவரும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என்று இந்தியர்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். டெல்லி வன்முறையில் 52 இந்தியர்கள் இறந்துள்ளளார்கள். யாரும் இந்து முஸ்லிம் என பிரித்து பேச வேண்டாம்" என்றார்.

மீனாட்சி லோகி பேச்சு
முன்னதாக பாஜக எம்பி மீனாட்சி லோகி லோக்சபாவில் பேசுகையில், "டெல்லி வன்முறை 36 மணி நேரத்திற்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, நீங்கள் பின்னோக்கிப் பார்த்தால், பல மாதங்களாக இது இருந்தது. வெறுக்கத்தக்க பேச்சு பேசியதாக கபில் மிஸ்ராவை சொல்கிறார்கள். ஆனால் டெல்லி வன்முறைக்கு அவர் காரணம் இல்லை. டெல்லியில் நடந்த வன்முறைகள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களால் இது தொடங்கியது " என்றார்.














Click it and Unblock the Notifications