நகர்புற ஏழைகளுக்கு வீடு வாங்க மானியம்.. மத்திய அரசின் ‘பக்கா’ பிளான்.. தேர்தலுக்கு முன் சாத்தியமா?
டெல்லி: நகர்புறங்களில் வாழும் ஏழை, நடுத்தர மக்கள் சொந்த வீடு வாங்கும் வகையில், கடன் மானியம் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ரூபாய் 60 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்த செலவீன நிதிக்குழு நிதியை ஒதுக்கியுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசு இதை செயல்படுத்த தீவிரம் காட்டுகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். அப்போது, மோடி அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் பெரும் அளவில் நாடு முழுவதும் கவனம் ஈர்த்தது. இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் அனைத்து குடும்பத்தினருக்கும் தண்ணீர் இணைப்பு, கழிவறை வசதி, 24 மணி நேரமும் மின்சார இணைப்பு ஆகிய வசதிகளுடன் வீடு இருக்கும் என்று அறிவித்தார்.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தையே அடியோடு மாற்றி, அவர்களுக்கு உறுதியான வீடுகளை கட்டி தருவதாக, மத்திய அரசு உத்தரவாதம் தந்து, இந்த திட்டத்தினை துவங்கியது.
இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு இதுவரை 118.90 லட்சம் வீடுகளுக்கு நிதியை ஒதுக்கியிருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. இவற்றில் 25.04 லட்சம் வீடுகள் கிரெடிட் லைன் ஸ்கீம்(CLS) என்ற திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வட்டி மானியம் வழங்கப்படுகிறது
சொந்த வீடு: இந்த நிலையில் தான் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் செலவீன நிதிக் குழு 60 ஆயிரம் கோடியை நகர்புற ஏழைகளுக்கு வீடு வாங்க மானிய திட்டத்திற்கு இந்த மாத துவக்கத்தில் ஒதுக்கியுள்ளது. பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லாத நிலையிலும் தற்போது மத்திய அரசு லோக்சபா தேர்தலை மனதில் வைத்து வேகம் காட்டுவதாக தெரிகிறது. இந்த திட்டம் மார்ச் 2024 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் படி, நகர்புறங்களில் வாழும் ஏழை, நடுத்தர மக்கள் சொந்த வீடு வாங்கும் வகையில், கடன் மானியம் மத்திய அரசு வழங்கும். அதாவது, வீடு கட்ட வங்கியில் கடன் பெறுபவர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கும். முன்னதாக பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ஏழை நடுத்தர மக்கள் வீடு கட்டுவதற்காக கடன் மானியம் வழங்கும் திட்டத்தை அரசு உருவக்கி வருவது என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
நிதிக்குழு ஒப்புதல்: பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், 'நடுத்தர வசதி கொண்ட மக்கள் தங்களுக்கு என்று சொந்தமாக வீடு வாங்கும் கனவுடன் இருக்கிறார்கள். நகர்புறங்களில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். அத்தகைய மக்கள் சொந்த வீடு வாங்கும் விதமாக திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது..
சொந்த வீடு வாங்கும் மக்களுக்கு மத்திய அரசு கடன் மானியம் வழங்கி உதவி அளிக்கும். இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பல லட்சம் ரூபாய் மிச்சம் வரும்"என்று கூறியிருந்தார். ரூபாய் 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி செலவீன நிதிக்குழு ஒப்புதல் அளித்துள்ள இந்த திட்டத்திற்கு கேபினட் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது கேபினட் ஒப்புதல் அளித்தவுடன் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.
தேர்தலுக்கு முன்பாக: இந்த திட்டத்தின் கீழ் நகர்புற ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் தங்கள் கடனுக்கு வட்டி மானியமாக 3- 6 சதவிகிதம் பெறுவர். 50 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கு இந்த வட்டி மானியம் பொருந்தும். மத்திய அரசு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. 2023-2024 பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் எதுவும் அளிக்கப்படவில்லை.
எனவே, அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் ஒப்புதல் கொடுத்த பிறகுதான் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். திட்டம் செயல்பாட்டுக்கு வந்தாலும் கடன் பெறுதல் முதற்கொண்டு பல காலதாமதம் பயனாளிகளுக்கு ஏற்படும். எனவே லோக்சபா தேர்தலுக்கு முன்பாக இதை செயல்படுத்தும் சாத்தியம் குறைவாக உள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications