ஓவர் நைட்டில் இரும்பு பாலத்தை அபேஸ் செய்த பலே கில்லாடிகள்! பீகாரில் கிணற்றை காணோம் பாணியில் திருட்டு
டெல்லி: தமிழ்த் திரைப்படம் ஒன்றில் கிணற்றை காணோம் என்று வருவதைப் போலப் பீகார் மாநிலத்தில் ஒரே நாளில் இரும்பு பாலம் மாயமாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான "கண்ணும் கண்ணும்" என்ற திரைப்படத்தில் வடிவேலுவின் கிணற்றை காணோம் காட்சி மிகவும் பிரபலம். அதாவது ஓவர் நைட்டில் தனது கிணற்றை சிலர் திருடிவிட்டதாகப் புகார் அளிக்கச் செல்வார்
இதைக் கேட்டு வெறுத்துப் போகும் போலீஸ் ஆய்வாளர், தனது வேலையே ராஜினாமா செய்வது போலக் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இதேபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது பீகாரில் நடந்துள்ளது.

பீகார்
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் 60 அடி இரும்புப் பாலம் திடீரென மாயமாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் கிராம மக்களை ஏமாற்றி, அவர்கள் உதவியுடனேயே இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. மொத்தம் மூன்று நாட்களில் பாலத்தை அவர்கள் பெயர்த்து எடுத்துள்ளனர். மாநில நீர்ப்பாசன அதிகாரிகளைப் போலக் காட்டிக் கொண்ட கொள்ளையர்கள், கேஸ் கட்டர் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்களைப் பயன்படுத்தி பாலத்தை இடித்துள்ளனர்.

உள்ளூர் அதிகாரிகள் உதவி
மூன்று நாட்களில் ஒட்டுமொத்த பாலத்தைப் பெயர்த்து எடுத்து அதில் இருந்து உலோகத்தை எடுத்துச் சென்றுள்ளனர். குறிப்பாக இந்த இரும்புப் பாலத்தை அகற்றும் போது கொள்ளையர்கள் சில சிக்கல்களை எதிர்கொண்டனர். பாலத்தை அகற்றுவது சிரமமாக இருக்கவே, உள்ளூர் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்களின் உதவியுடன் கொள்ளையர்கள் பாலத்தை அகற்றி உள்ளனர்.

பழைய பாலம்
இது திட்டமிடப்பட்ட கொள்ளை சம்பவம் என்பதை உள்ளூர் அதிகாரிகள் புரிந்து கொள்வதற்கு முன்னர், கொள்ளையர்கள் உலோகத்தை அபேஸ் செய்துவிட்டுத் தப்பிவிட்டனர். பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் நஸ்ரிகஞ்ச் பகுதியை அடுத்துள்ள அமியவார் கிராமத்தில் இந்த பாலம் அமைந்துள்ளது. அர்ரா கால்வாய் மேலே 1972ஆம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. சுமார் 50 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் பயன்படுத்தவே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

விசாரணை
உள்ளூர் மக்கள் யாருமே இந்த பாலத்தைப் பயன்படுத்துவதில்லை. பொதுமக்கள் அனைவரும் இதன் பக்கத்தில் இருக்கும் புதிய கான்கிரீட் பாலத்தையே பயன்படுத்தி வந்தனர். திருட்டு சம்பவத்தில் கொள்ளையர்களுக்கு தாங்கள் உதவி உள்ளதை உணர்ந்த உள்ளூர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளார்.

போலீஸ் அதிகாரி
இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளிடம் இருந்து எங்களுக்குப் புகார் வந்துள்ளது. அதன்படி, அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண முயன்று வருகிறோம். இது தொடர்பாகக் குப்பை டீலர்களை எச்சரித்துள்ளோம். அந்த பாலம்60 அடி நீளமும் 12 அடி உயரமும் இருந்தது" என்றார்.












Click it and Unblock the Notifications