8வது சம்பள கமிஷன் மீண்டும் தாமதம்.. ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு.. எதற்காக தெரியுமா?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான 8-வது மத்திய சம்பள கமிஷன் (8th Central Pay Commission - CPC) தங்களின் புதிய பரிந்துரைகளை வழங்குவதற்கு முன்பாக, பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் கோரிக்கை மனுக்களைப் (Memorandum of Suggestions) பெறுவதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை மறுபரிசீலனை செய்யும் 8வது மத்திய சம்பள கமிஷன் முடிவுகளை நிர்ணயம் செய்யும் முக்கிய அமைப்புகள் தங்கள் ஆலோசனைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 15, 2026 வரை நீட்டித்து காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சம்பள கமிஷன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மத்திய அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு சங்கங்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் அரை மாதம் நீட்டித்து, வரும் ஜூன் 15, 2026 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைகளைப் பெறும் அதிகாரப்பூர்வ செயல்முறையானது கடந்த 2026 மார்ச் 5 அன்று முறைப்படி தொடங்கப்பட்டது. அதன் பிறகு இதற்கான முதல் காலக்கெடு ஏப்ரல் 30 ஆகவும், பின்னர் மே 31 ஆகவும் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்பொழுது ஜூன் 15 வரை இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் செயல்படும் இந்தக் குழுவில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் ஜெயின் உறுப்பினர் செயலாளராகவும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரும் பொருளாதாரப் பேராசிரியருமான புலக் கோஷ் உறுப்பினராகவும் பணியாற்றுகின்றனர். 2025 நவம்பரில் தொடங்கிய இந்தக் குழுவின் பணி ஆறு மாதங்களைத் தாண்டியுள்ளது.
யாருக்கு பாதிப்பு?
இந்த 8வது சம்பள கமிஷன்வின் பரிந்துரைகள் மத்திய அரசின் சுமார் 50 லட்சம் ஊழியர்களையும், 65 லட்சம் ஓய்வூதியர்களையும் நேரடியாகப் பாதிக்கும். இதில் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களும் அடங்குவர். எனவே இந்த முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
யார் மனு அளிக்கலாம்?
மத்திய அரசு ஊழியர்கள், தொழில்துறை மற்றும் அல்லாத துறை ஊழியர்கள், அகில இந்திய சேவைகள், பாதுகாப்புப் படைகள், யூனியன் பிரதேச ஊழியர்கள், இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை அதிகாரிகள், நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் (ரிசர்வ் வங்கி தவிர), உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் துணை நீதிமன்ற அதிகாரிகள், ஓய்வூதியர்கள், சேவை சங்கங்கள், மத்திய அரசுத் துறைகள் மற்றும் யூனியன் பிரதேச அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களும் தங்கள் ஆலோசனைகளைச் சமர்ப்பிக்கலாம்.
இந்த நீட்டிப்பு மூலம் மத்திய அரசு ஊழியர்களின் நலன்கள் முழுமையாகப் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழு விரைவில் இறுதிப் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications