அரசியல் சாசன திருத்த மசோதா: லோக்சபாவில் ஆவேசமடைந்த ஆ.ராசா! தெறிக்கவிட்ட திமுக எம்பிக்கள்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 131-வது அரசியல் சாசன திருத்த மசோதா மீது திமுக எம்பி ஆ.ராசா மிகக் கடுமையான சட்ட ரீதியான ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளார். மேஜையை தட்டி அவர் ஆவேசமாக பேசியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 131-வது அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஆவேசமாக பேசிய ஆ.ராசா
இது குறித்து பேசிய ஆ.ராசா, "முதலில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவிற்கு இந்த அவையில் உரிய அனுமதி பெறப்பட வேண்டும். அவை அனுமதி பெற்ற பிறகு, அதற்கு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். இந்த நடைமுறைகள் முடிந்த பின்னர்தான், அதனடிப்படையில் அரசியல் சாசன திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர முடியும்.
இந்த முறையான படிநிலைகளைப் பின்பற்றாமல், நேரடியாகச் சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டு வருவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இப்படிச் செய்தால் நாம் இந்த அவையில் விவாதிக்கும் அத்தனையுமே பின்னாளில் சட்டத்திற்குப் புறம்பானதாக மாறிவிடும் அபாயம் உள்ளது" என்று எச்சரித்தார்.
திமுக எம்பிக்கள் கொந்தளித்த நிலையில், திமுக பிரிவினைவாதம் பேசுவதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த ஆ.ராசா, "1971 பாகிஸ்தான் போரின் போதும், 1999 கார்கில் போரின் போதும், கோடிக் கணக்கில் நிதி அளித்த கட்சி திமுக! தேசியவாதம் பற்றி எங்களுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. மாநில சுய ஆட்சியை மதிக்காமலும், ஹிந்தி-சமஸ்கிருதத்தை எப்போதெல்லாம் திணிக்க முயற்சி செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் எங்களின் அடையாளத்தை பாதுகாக்க மட்டுமே குரல் கொடுக்கிறோம்" என்று பதிலடி கொடுத்தார்.
கொந்தளித்த திமுக எம்பிக்கள்
அதேபோல, "பெண்கள் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறையைக் குறுக்கு வழியில் திணிக்க மத்திய அரசு முயல்கிறது" என்று திமுக எம்பி டி.ஆர்.பாலு கடும் விமர்சனங்களை முன்வைத்திக்கிறார்.
131-வது அரசியல் சாசன திருத்த மசோதா
131-வது அரசியல் சாசன திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்படி, பெண்களுக்கு மொத்த எம்பி சீட்டில் 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, தொகுதி மறுவரையறை செய்த பின்னர்தான் இதை அமல்படுத்த முடியும்.
பிரச்சனை என்ன?
தொகுதி மறுவரை என்பது மக்கள் தொகை எண்ணிக்கையில் நடக்கும். இதற்கு முன்னர் 1971ல் தொகுதி மறுவரையறை செய்ய முயற்சி நடந்தது. ஆனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த வட மாநிலங்கள் போதுமான முயற்சியை எடுக்கவில்லை. தென் மாநிலங்கள் மட்டும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. எனவே, மறுவரையறை அமல்படுத்தப்பட்டால், தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று சொல்லி, மக்கள் தொகையை கட்டுப்படுத்த 2001 வரை டைம் கொடுக்கப்பட்டு மறுவரையறை ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு vs வட மாநிலங்கள்
2001லும் வட மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவில்லை. மறபுறம் தென் மாநிலங்கள் மிகச்சிறப்பாக அதை செய்திருந்தன. இதனால் இந்த முறையும் தொகுதி மறுவரையறை செய்ய முடியாது, என்று அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இப்போதும் கூட மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விஷயத்தில் வட மாநிலங்கள், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள் கோட்டை விட்டிருக்கின்றன.
இந்நிலையில், மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது, குறிப்பாக பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா மூலம் இதை செய்யக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதேநேரம் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.















Click it and Unblock the Notifications