துப்பாக்கியோடு பள்ளிக்கு வந்த மாணவர்.. டெல்லியில் பரபரப்பு.. நடந்து என்ன?
டெல்லி: டெல்லி, தீபாக் விஹார் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவர் தனது புத்தகப்பையில் துப்பாக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் மாணவரின் பேக்கில் இருந்து எடுக்கப்பட்டது உரிமம் பெற்ற துப்பாக்கி என்பது தெரிவந்துள்ளது.
டெல்லி, தீபக்விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து போலீஸாருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் அப்பள்ளிக்கு விரைந்து சென்றனர். அங்கு 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவரின் புத்தகப்பையில் துப்பாக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அது உரிமம் பெற்ற துப்பாக்கி என்பது தெரியவந்தது.

மேலும், அந்த துப்பாக்கியின் உரிமத்தை போலீஸார் சோதனை செய்தபோது அது காலாவதியாகமால் இருப்பதும் தெரியவந்துள்ளது. மாணவர் வைத்திருந்த கை துப்பாக்கியில் குண்டுகள் எதுவும் இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவனின் தாயாரை பள்ளி நிர்வாகத்தினர் பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
பள்ளிக்கு வந்த சிறுவனின் தாயார் கூறுகையில், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி எனது கணவருடையதுதான். எனது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இற்துவிட்டார். இதையடுத்து, துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடலாம் என்பதற்காக வெளியில் வைத்திருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் சிறுவனிடம் கேட்டபோது, பொம்மை துப்பாக்கி என்று நினைத்துதான் பள்ளிக்கு துப்பாக்கியை எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளான். இதைத் தொடர்ந்து, சிறுவனின் தாயார் சம்பவ தினத்தன்றே துப்பாக்கியை காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். பேக்கில் வைத்து 6 ஆம் வகுப்பு மாணவன் நிஜ துப்பாக்கியை பள்ளிக்கு வந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற மற்றொரு சம்பவமான 3 சிறுவர்கள் சேர்ந்து 5 வயது சிறுவனை அடித்துக் கொன்ற சம்பவமும் பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 மாணவர்களுமே 9 முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான் இச்சம்பவத்தில் கூடுதல் அதிர்ச்சி.
டெல்லி, பிஜ்புரி பகுதியில் உள்ள மதராஸாவில் படித்து வந்த 3 வயது சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக சிறுவனின் தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவனின் தாய் பிரிஜ்புரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு தனது மகனை கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், மதரஸாவில் படிக்கும் மூன்று சிறுவர்களால் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுவனுக்கு பல்வேறு உள்காயங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவரது கல்லீரல் சிதைந்து, வயிறு மற்றும் வலது நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனை ஏன் அடித்துக் கொன்றீர்கள் என்று போலீஸார் கேட்டபோது, சிறுவன் கெட்ட வார்த்தை பேசியதாகவும், சிறுவன் இறந்தால் மதரஸாவில் விடுமுறை அளிக்கப்படும் என்பதால் அடித்துக் கொன்றதாகவும் கூறியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையை போலீஸார் உறுதி செய்துள்ளனர். கொலை செய்த 3 சிறுவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications