மொத்தமாக காலியாகும் ஆம் ஆத்மி.. ராகவ் சத்தா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பாஜகவில் ஐக்கியம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் விதமாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான ராகவ் சத்தா, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். அவருடன் சந்தீப் பதக், அசோக் மிட்டல் ஆகிய இரண்டு எம்பிக்களும் பாஜகவில் இணைகிறார்கள். இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநிலங்களவை ஆம் ஆத்மி குழுவின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டார். இது கட்சிக்குள் அவருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே இருந்த மோதலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. சில காலமாகவே இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருந்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சத்தாவின் பதவி பறிக்கப்பட்டது அதை உறுதி செய்தது.

Raghav Chadha Joins BJP

ராகவ் சத்தா

இந்தச் சூழலில் தான் அவர் இன்றைய தினம் ஆம் ஆத்மியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டெல்லியில் சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகவ் சத்தா, இந்த தகவலை உறுதி செய்தார். அவர் மேலும், "எனது ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி 15 ஆண்டுகளாக வளர்த்த கட்சி, இன்று அதன் கொள்கைகளிலிருந்து விலகிவிட்டது. இது இப்போது நாட்டுக்காக உழைக்கவில்லை, சுயநலத்திற்காகச் செயல்படுகிற.. கடந்த சில ஆண்டுகளாகவே, நான் ஒரு தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதன் என்பதை உணர்ந்தேன். எனவே, இன்று ஆம் ஆத்மியிடமிருந்து விலகி, மக்கள் பக்கம் (பாஜக) செல்லத் தீர்மானித்துள்ளேன்" என்றார்.

3ல் இரு பங்கு

ராவக் சத்தா இப்போதும் ஆம் ஆத்மியில் இருந்து எம்பியாக இருக்கிறார். அவர் இப்போது பாஜகவில் ஐக்கியமானால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இருப்பினும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்கள் பிரிந்து வேறு கட்சிக்கோ அல்லது தனியாகக் கட்சி தொடங்கி சென்றால், அது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வராது. இதைக் குறிப்பிட்ட ராகவ் சத்தா, "ஆம் ஆத்மியின் மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களவை எம்பிக்கள் பாஜகவுடன் இணையத் தீர்மானித்துள்ளோம். சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோரும் இவருடன் பாஜகவில் இணைகிறார்கள். மற்றவர்களும் மிக விரைவில் பாஜகவில் இணையவுள்ளனர்" என்றார்.

ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி

ஆம் ஆத்மியை பொறுத்தவரை அவர்கள் 10 ஆண்டுகள் டெல்லியை ஆட்சி செய்தார்கள். பஞ்சாப் மாநிலங்களில் இப்போது ஆளும் கட்சியாக இருக்கிறார்கள். தேசியளவில் முக்கிய கட்சியாக உருவெடுக்க முயலும் ஆம் ஆத்மி கட்சிக்கு, அதன் முகமாக அறியப்பட்ட ராகவ் சத்தா வெளியேறி உள்ளது மிகப் பெரிய அடியாகும். குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்றச் செயல்பாடுகளில் ராகவ் சத்தா மிக முக்கியமான பங்கைக் கொண்டிருந்தார்.

பெரிய அடி

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்பட்ட ராகவ் சத்தாவின் இந்தத் தாவல், ஆம் ஆத்மி கட்சிக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசலை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியுள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாபிற்கு வெளியே கட்சியை விரிவுபடுத்த முயலும் ஆம் ஆத்மிக்கு, இந்த 'ரிவர்ஸ் கியர்' அரசியல் அதிர்ச்சி தரும் என்பதில் சந்தேகமில்லை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+