அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ABS கட்டாயம்! அடுத்த ஆண்டு முதல் நடக்கப்போகும் பெரிய மாற்றம்!
டெல்லி: 2026ம் ஆண்டு ஜனவரி 1 முதல் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் எனப்படும் பிரேக்கிங் முறை கட்டாயமாக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விரைவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளது.

இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் கட்டாயம்
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 150cc-க்கு மேற்பட்ட மாடல்களுக்கு மட்டுமே ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய விதி மூலம் இனி சந்தையில் விற்பனையாகும் அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும், அதாவது சுமார் 75% இரு சக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் முறை கட்டாயமாக்கப்படும்.
ஏபிஎஸ் பிரேக்கிங் முறையானது, அவசரமாக பிரேக் போடும்போது வாகனத்தின் சக்கரங்கள் லாக் ஆகாமல் தடுக்கும். இதனால் வாகனம் ஸ்கிட் ஆகாமல் பாதுகாப்பாக ஓட்ட முடியும்.
சமீபத்திய அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த 1,51,997 சாலை விபத்துகளில் சுமார் 20% இரு சக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை போக்குவரத்து மற்றும் கல்வி நிறுவனத்தின் (IRTE) இயக்குனர் ரோஹித் பலுஜா இது குறித்து கூறுகையில், “இது நீண்டகாலமாக கோரப்பட்டு வந்த ஒரு மாற்றம். வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் திடீரென பிரேக் போடுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன” என்றார்.
விலை உயர்வு மற்றும் சந்தை தாக்கம்
ஏபிஎஸ் பிரேக்கிங் முறையின் பாதுகாப்பு நன்மைகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அரசாங்கத்தின் இந்த உத்தரவு, உற்பத்திச் செலவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. இந்த கூடுதல் செலவு நுகர்வோருக்கு சுமையாக இருக்கலாம். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஆரம்ப நிலை இரு சக்கர வாகனங்களின் விலை ₹2,500 முதல் ₹5,000 வரை உயரக்கூடும்.
75cc முதல் 125cc வரையிலான பைக் மாடல்கள் FY25 இல் உள்நாட்டு விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கு வகிக்கின்றன. கடந்த நிதியாண்டில் பைக் விற்பனை 4.6% உயர்ந்து 9.26 மில்லியனாக இருந்தது. அதே காலகட்டத்தில் ஸ்கூட்டர் விற்பனை 17% உயர்ந்து 6.85 மில்லியன் யூனிட்களாக இருந்தது.
இந்தியாவில் சாலை விபத்துகளில் 44% இரு சக்கர வாகனங்களால் ஏற்படுகின்றன. எனவே அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்துவது மிக முக்கியம். அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் அறிமுகம் செய்வது மிகவும் அவசியமானது. ஏபிஎஸ் அமைப்பு கட்டாயமாக்கப்பட்டிருப்பதால் கூடுதல் செலவாகும் என்பத உண்மைதான். ஆனால் பாதுகாப்பே மிக முக்கியம்.
பொதுப் போக்குவரத்தில் முன்னேற்றம் இருந்தாலும், இரு சக்கர வாகனங்கள் நாட்டின் முக்கிய நகரங்களின் உயிர்நாடியாக உள்ளன. நாம் அவற்றுடன் வாழ வேண்டியுள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை பாதுகாப்பானதாக மாற்றுவதன் மூலம் மட்டுமே சாலை விபத்துக்களைக் குறைக்க முடியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications