குறைந்த கட்டணத்தில் சுகாதாரக் கல்வி.. சிறப்பு மையத்தை திறக்கும் அதானி குழுமம்!
டெல்லி: அதானி அறக்கட்டளை, குறைந்த கட்டணத்தில் சுகாதாரக் கல்வியை வழங்குவதற்கான சிறப்பு மையத்தை (Centre of Excellence) உருவாக்க DMIHER நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த முயற்சியானது கல்வித்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதையும், சமூக சுகாதார அணுகலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதானி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சிறப்பு மையம்: அதானி அறக்கட்டளை - DMIHER கூட்டு
அதானி அறக்கட்டளை மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகமான, 'தத்தா மேகே இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச்' ஆகியவை இணைந்து இந்த சிறப்பு மையத்தை உருவாக்க இருக்கின்றன. "சேவையே பிரதானம்" என்ற தத்துவத்தின் அடிப்படையில், தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று அதானிக் குழுமம் கூறியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் புதுமையான அணுகுமுறை, சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி மற்றும் சுகாதாரத்தில் கவனம்
இந்த மையத்தில் 15 துறைகளில், இளங்கலை, முதுகலை மற்றும் உயர் சிறப்புப் படிப்புகள் உட்பட 217 வகையான கல்வித் திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. அதானி குழுமத்தின் "Temple of Healthcare" என்ற கருத்தின் அடிப்படையில், சேவை மற்றும் கருணை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த மையங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மையம் மூலம், குறைந்த கட்டணத்தில், உயர்தரக் கல்வியை வழங்குவதே இந்த அறக்கட்டளையின் நோக்கம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வாய்ப்புகள் குறைவாக உள்ள இடங்களில் சேவை செய்வதே அதானி அறக்கட்டளையின் முக்கிய குறிக்கோள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதானி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர். பிரணவ் அதானி இது குறித்து கூறுகையில், "இந்த கூட்டு முயற்சி எங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு. இது புதுமை மற்றும் அக்கறையின் அடையாளமாக இருக்கும். நாம் 2047-க்குள் 'விக்ஸித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைய முடியும்" என்று கூறியுள்ளார்.
DMIHER-ன் நிறுவனரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தத்தா மேகே கூறுகையில், "இந்த கூட்டு முயற்சி, சுகாதாரக் கல்வியை மேம்படுத்தும். கடந்த 35 ஆண்டுகளாக, DMIHER ஒரு தன்னிறைவு பெற்ற நிறுவனமாக வளர்ந்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்களிப்பாக இருக்கும். 2047-க்குள் 'விக்ஸித் பாரத்' என்ற இலக்கை அடைய இது ஒரு முக்கியமான படி" என்றார்.
இந்த கூட்டு முயற்சியின் மூலம், சுகாதாரக் கல்வி மற்றும் சமூக நலனில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உயர்தர மருத்துவக் கல்வி சென்று சேரும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications