அகமதாபாத் விமான விபத்துக்கு பைலட் காரணமா? இத்தாலி ஊடகம் ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைக்கிறது-மத்திய அரசு
டெல்லி: கடந்த ஆண்டு அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் விபத்துக்கு காரணம் பைலட்கள் தான் என்று இத்தாலியின் செய்தி ஊடகம் குற்றம்சாட்டியிருந்தது. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
இத்தாலியின் செய்தி ஊடகமான 'கொரியர் டெல்லா செலா', நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "விபத்தில் சிக்கிய விமானம் போயிங் 787 டிரீம்லைனர். இது அமெரிக்க தயாரிப்பு விமானம் என்பதால், விபத்து குறித்த அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ஆய்வை தொடங்கினர்.

விபத்துக்கான காரணம்
அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், போயிங் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு, விமானத்தின் என்ஜின் தயாரிப்பாளர்கள் ஆகியோர் விபத்து புலனாய்வு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து டிஜிட்டல் ஃபாரன்சிக் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க அதிகாரிகள், என்ஜினுக்கு செல்லும் எரிபொருள் சுவிட்ச் தானாக ஆஃப் ஆகிறதா? என்பதை தெரிந்துக்கொள்ள, செயற்கையான சூழலை உருவாக்கி சோதித்தனர்.
பைலட்தான் காரணமா?
அதில், என்ஜினுக்கு செல்லும் எரிபொருள் சுவிட்ச் ஆஃப் ஆகவில்லை. கைகளால் ஆஃப் செய்யப்பட்டால் மட்டுமே ஆஃப் ஆனது. அப்படியெனில், அகமதாபாத் விபத்து காரணம் தொழில்நுட்ப கோளாறு காரணம் கிடையாது. மனித தவறுதான் காரணம்" என்று கூறியிருந்தது. அப்படியெனில் விபத்துக்கு இந்திய பைலட்கள்தான் காரணம் என்று கூறியிருந்தது.
முதன்மை விசாரணை அமைப்பு
ஆனால் இந்த அறிக்கைக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது. விமான விபத்து குறித்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை என விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) தெளிவுபடுத்தியுள்ளது. AAIB என்பது மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற முதன்மை விசாரணை அமைப்பாகும்.
தவறான தகவல்
இத்தாலி செய்தி ஊடகத்தில் வந்த தகவல்கள் தவறானவை, வெறும் ஊகம் சார்ந்தவை என AAIB தெரிவித்தது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து தொடர்பான விசாரணை முடிந்துவிட்டதாகக் கூறும் செய்திகள் தவறானவை, ஊகமானவை. விசாரணை தொடர்கிறது. எந்த இறுதி முடிவுகளும் எட்டப்படவில்லை" என்று அறிவித்தது.
விசாரணை விதிகள்
விமான விபத்துகள் இந்தியாவின் 'விமான விபத்துகள் மற்றும் சம்பவங்களின் விசாரணை விதிகள், 2025' மற்றும் ICAO Annex 13 இன் சர்வதேச பாதுகாப்புத் தரங்களின்படி, தொழில்நுட்ப, ஆதார வழிமுறைகளுடன் விசாரிக்கப்படுகின்றன. விபத்துகளின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதே இவற்றின் நோக்கம்.
முன்னதாக வெளியிடப்பட்ட ஆரம்ப அறிக்கையில், அந்நேரத் தகவல்கள் மட்டுமே இருந்தன. முடிவுகளையும் பரிந்துரைகளையும் அடக்கிய இறுதி அறிக்கை, சர்வதேச விதிமுறைகளின்படி, விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே வெளியிடப்படும் என AAIB விளக்கமளித்தது .
யூகத்தின் அடிப்படையில் செய்திகள்
அதேபோல வெறும் யூகத்தின் அடிப்படையில் மட்டும் செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் முன்கூட்டியே செய்திகள் வெளியிடுவது மக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்தி, நடந்துகொண்டிருக்கும் விசாரணையின் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும், என்று AAIB எச்சரித்தது.












Click it and Unblock the Notifications