3-வது அலைக்கு வாய்ப்பு.. குறைந்தபட்சம் 2 வாரம் ஊரடங்கு வேண்டும்.. எய்ம்ஸ் இயக்குனர் வலியுறுத்தல்!
டெல்லி: இந்தியாவில் 3-வது அலைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், குறைந்தபட்சம் 2 வாரம் ஊரடங்கு போட வேண்டும் என்றும் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தினசரி பாதிப்பிலும், தினசரி உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, மகாரஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம் என அனைத்து மாநிலங்களிலும் பாதிப்பு கூடிக் கொண்டே செல்கிறது.

கொரோனா அதிகரிப்பு
வட மாநிலங்களில் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது தவிர நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகக் கடுமையாக இருப்பதால் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்கள் ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இரவு ஊரடங்கால் அர்த்தமில்லை
இந்த நிலையில் வார இறுதி ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கால் எந்த அர்த்தமும் இல்லை என்று அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- மூன்று விஷயங்களை நாம் இங்கு கவனிக்க வேண்டும். முதலாவது மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாகும். இரண்டாவது பாதிப்புகள் எண்ணிக்கையை அதிரடியான முறையில் குறைப்பது ஆகும்.

2 வார ஊரடங்கு வேண்டும்
மூன்றாவது தடுப்பூசிகளை அதிக அளவு பயன்படுத்துவது ஆகும். நாம் வைரஸ் பரிமாற்ற சங்கிலியை உடைக்க வேண்டும்.. மனிதர்களிடையேயான நெருங்கிய தொடர்பை குறைத்தால் பாதிப்பு எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. ஊரடங்கு பற்றி நாம் பேசினால், அது குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது இருக்க வேண்டும். ஆக்ரோஷமாக இருக்க வேண்டும். வார இறுதி நாட்கள் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளில் எந்த அர்த்தமும் இல்லை.

3-வது அலைக்கு வாய்ப்பு
தனிநபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பதற்கு நாம் எவ்வளவு விரைவாக தடுப்பூசி போட முடியும்? இரண்டாவதாக வைரஸ் எவ்வாறு மாறுகிறது? என்பதை நாம் கண்காணிக்க வேண்டும். வைரஸ் மேலும் வீரியமாக உருவாகி அது நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பித்தால் மக்கள் உருவாக்கிய நோய் எதிர்ப்பு சக்தி குறைவான செயல்திறன் மிக்கதாக மாறும். இதனால் ஒருவர் மீண்டும் தொற்றுநோயைப் பெறலாம். இதன் காரணமாக நாம் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை காண வாய்ப்பு உள்ளது என்று ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications