புதிதாக 250 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா.. 'ஏர் பஸ்' நிறுவனத்துடன் ஒப்பந்தம்.. பிரதமர் பெருமிதம்!
ஏர் இந்தியாவை வாங்கியது முதலாகவே அதன் சேவை தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் டாடா குழுமம் ஈடுபட்டு வருகிறது. மேலும், பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கேற்ப விமானங்களின் எண்ணிக்கையையும் உயர்த்த உள்ளது.
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'ஏர் பஸ்' (AirBus) என்ற விமானக் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து புதிதாக 250 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்குவதற்காகவும், சர்வதேச அளவிலான விமானப் போக்குவரத்தில் பிரத்யேக இடம் பிடிப்பதற்காகவும் இந்த நடவடிக்கையில் ஏர் இந்தியா நிறுவனம் இறங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா - பிரான்ஸ் இடையேயான உறவின் ஆழத்தை இது பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.

டாடா வசம் சென்ற 'ஏர் இந்தியா'
மத்திய அரசின் வசம் இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்ததை தொடர்ந்து, அதனை விற்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டாடா குழுமம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. ஏற்கனவே டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியாவை மத்திய அரசு தன்வசப்படுத்தியது. தற்போது மீண்டும் அந்நிறுவனத்தை டாடா குழுமம் கையில் எடுத்திருக்கிறது.

250 புதிய விமானங்கள்
ஏர் இந்தியாவை வாங்கியது முதலாகவே அதன் சேவை தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் டாடா குழுமம் ஈடுபட்டு வருகிறது. மேலும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கேற்ப விமானங்களின் எண்ணிக்கையையும் உயர்த்த ஏர் இந்தியா திட்டமிட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகவே, தற்போது 250 புதிய விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ஏர் இந்தியா மேற்கொண்டுள்ளது.

முறைப்படி அறிவிப்பு
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'ஏர் பஸ்' நிறுவனத்திடம் இருந்து இந்த விமானங்களை வாங்க ஏர் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த 250 விமானங்களில் 40 விமானங்கள் அகலமான உடலமைப்பை கொண்டவை ஆகும். இதற்கான ஒப்பந்தம் கடந்த மாதம் 27-ம் தேதியே கையெழுத்தாகிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இதனை டாடா குழுமங்களின் தலைவர் என்.சந்திரசேகரன் இன்று முறைப்படி அறிவித்தார்.

மோடி பெருமிதம்
பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மேக்ரான் உடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாக இன்று ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வின் போதே, மேற்குறிப்பிட்ட இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை டாடா குழுங்களின் தலைவர் சந்திரசேகர் வெளியிட்டார். அப்போது மோடி பேசுகையில், "இந்தியா - பிரான்ஸ் இடையேயான உறவு மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்று. தற்போது ஏர் இந்தியா - ஏர் பஸ் இடையே ஏற்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தமானது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் ஆழத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான விவகாரங்களில் இந்தியாவும், பிரான்ஸும் பெரும் பங்களிப்புகளை அளித்து வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications