இனி 50% பேர் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.. அரசு - தனியார் ஊழியர்களுக்கு குட்நியூஸ்! டெல்லியில்
டெல்லி: தலைநகர் டெல்லி-என்சிஆரில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீத ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஐடி மட்டுமின்றி அனைத்து துறையினருக்கும் பொருந்தும்.
டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சனை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்கும்.

அதன்படி இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்துக்கு பிறகு காற்று மாசுபாடு அதிகரிக்க தொடங்கியது. பொதுமக்கள் பலரும் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவர்கள் முதல்வர்கள் முதியவர்கள் வரை பலரும் சுவார பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால் டெல்லியின் நிலை மோசமாகி உள்ளது. இந்நிலையில் தான் காற்று மாசுபாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கட்டுமான பணிகளுக்கு தடை, இடிபாடுகளை கொண்டு செல்ல தடை, பெயிண்ட் அடிக்க தடை போன்ற பல தடைகள் ஏற்கனவே விதிக்கப்பட்டு இருந்தன. 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்கவும் அனுமதிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி தனியார் மற்றும் அரசு நிறுவன ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளது. டீசல் ஜெனரேட்டர்களின் பயன்பாட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஏற்ற வகையில் தடையற்ற மின்சாரம் வழங்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. நெரிசல் மிகுந்த சாலைகளில் போக்குவரத்தை உடனுக்குடன் சரிசெய்ய கூடுதல் பணியாளர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்களிடையே மாசுபாட்டுக்கான எச்சரிக்கைகளை விட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
டெல்லியை பொறுத்தவரை காற்று மாசுபாடு குறித்து தொடர்ந்து காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) கண்காணித்து அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளானை (Grap) செயல்படுத்தி வருகிறது. அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தான் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களின் 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபற்றி டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறுகையில், ‛‛அரசாங்கம் அனைத்து மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் முழு தீவிரத்துடனும், 24 மணி நேர கண்காணிப்புடனும் செயல்படுத்தி வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த எம்சிடி மற்றும் ஜிஎன்சிடிடிஅலுவலகங்களுக்கு நேர மாற்றமும் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications