"போய்.. உங்க மனைவிகளிடம் கேளுங்கள்!" பாஜக தலைவர்களை சீண்டிய AIUDF தலைவர் பத்ருதீன் அஜ்மல்! என்னாச்சு
டெல்லி: விலைவாசி உயர்வு தொடர்பாக அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் பத்ருதீன் அஜ்மல் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
இந்தியாவில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. எரிபொருள் விலை கடந்த இரு மாதங்களாக உயரவில்லை என்றாலும் கூட தற்போது விற்பனை செய்யப்படும் விலை அதிகம் என்றே பொதுமக்கள் முணுமுணுக்கின்றனர்.
விலைவாசி உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆளும் மத்திய பாஜக அரசைக் கேள்வி எழுப்பி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியும் கூட போராட்டத்தை நடத்தி இருந்தது.

விலைவாசி உயர்வு
இந்தச் சூழ்நிலையில், விலைவாசி உயர்வு தொடர்பாக அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் பத்ருதீன் அஜ்மல் பாஜக அரசை மிகக் கடுமையாகச் சாடி உள்ளார். முதலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைக் கடுமையாகச் சாடிய அவர், "இந்தியாவின் பணம் எல்லாம் நிதி அமைச்சரிடம் உள்ளது. நாட்டில் ஒவ்வொரு நபரும் பொருட்களை வாங்க எவ்வளவு செலவு செய்கிறார் என்பது அவருக்கு எப்படித் தெரியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

மனைவிகளிடம்
மேலும், விலைவாசி உயர்வு மக்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை பாஜக எம்பிக்கள் வெளிப்படையாகக் கூறாமல் மறைப்பதாகவும் அவர் சாடினார். "எல்லா அமைச்சர்களும் பணவீக்கமே இல்லை எனக் கூறுகின்றனர். இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. பாஜக எம்பிக்கள் தங்கள் மனைவிகளிடம் சென்று கேட்க வேண்டும். கிட்சன்களை எப்படி நடத்துகிறார்கள். விலைவாசி எந்தளவுக்கு உள்ளது என்பதைக் கேட்டறிய வேண்டும்.

மக்களவை தேர்தல்
இதை மத்திய பாஜக அரசு முக்கிய பிரச்சினையாக உணர்ந்து தீர்வை தர முனைய வேண்டும். இல்லையென்றால் பண வீக்கமே 2024 மக்களவை தேர்தலில் அவர்களுக்கு முக்கிய எதிரியாக இருக்கும்" என் ஆளும் பாஜக அரசை அவர் விமர்சித்தார். விலைவாசி உயர்வு காரணமாகப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், இப்போது ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் பத்ருதீன் அஜ்மலும் பாஜகவைச் சாடி உள்ளார்.

எதிர்க்கட்சிகள்
கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு தொடர்பாக பாஜகவை விமர்சித்து வருகிறது. நேற்றைய தினம் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அதேநேரம் பாஜக தலைவர்கள் அமலாக்கத் துறை விசாரணையில் இருந்து தப்பவே காங்கிரஸ் இதுபோன்ற போராட்டத்தைக் கையில் எடுப்பதாக விமர்சித்தது.

விவாதம்
அதேபோல நாடாளுமன்றத்திலும் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் சில எதிர்க்கட்சி எம்பிகள் சஸ்பென்ட் கூடச் செய்யப்பட்டனர். இந்தச் சூழலில் கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பதில் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications