உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி.. தலா 38 தொகுதிகளில் போட்டி: அகிலேஷ், மாயாவதி அறிவிப்பு
டெல்லி: லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து உத்தரபிரதேசத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். தலா 38 தொகுதிகளில் அவை போட்டியிட உள்ளன.
மாநில தலைநகர் லக்னோவில் இன்று மதியம் 12 மணியளவில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. 21வது நூற்றாண்டின், மிகப்பெரிய கூட்டணி முடிவு என்று இது வர்ணிக்கப்படுகிறது.

மாயாவதி கூறியதாவது: எங்களின் இந்த பிரஸ் மீட் நரேந்திர மோடி, அமித்ஷாவுக்கு உறக்கத்தை தொலைக்கும். விருந்தினர் மாளிகை கசப்பு சம்பவத்தை மறந்து பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைந்துள்ளோம்.
எங்கள் கூட்டணியில் காங்கிரஸை சேர்க்கவில்லை. நாட்டை வெகுகாலம் ஆண்ட கட்சி அது. மக்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது என்றார்.
அகிலேஷ் யாதவ் கூறுகையில், மாயாவதியைய சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் அவமரியாதை செய்தால், அது நேரடியாக என்னையே அவமதிப்பது போன்றதாகும். நாட்டை பிளவுபடுத்தி வெற்றி பெற பாஜக முயலுகிறது. 2019 லோக்சபா தேர்தலில், பாஜக முயற்சி தோல்வியில் முடியும். பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி தலா 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
சரிசம தொகுதிகளில் போட்டியிட சம்மதித்ததற்கு மாயாவதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய தொகுதிகள் இப்போது காங்கிரஸ் வசம் உள்ளது. அங்கே போட்டியிடுவதில்லை என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
மொத்தமுள்ள 80 லோக்சபா தொகுதிகளில் தலா 38 தொகுதிகளில் இக்கட்சிகள் போட்டியிடும் நிலையில், 2 காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவை ஏற்கனவே சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தி வகிக்கும் தொகுதிகள் என்பதால் இந்த மரியாதை தரப்பட்டுள்ளது. மற்ற இரு தொகுதிகள் காலியாக விடப்பட்டுள்ளன. இன்னும் சில சிறு கட்சிகளை கூட்டணியில் சேர்த்து அந்த 2 தொகுதிகளை வழங்கும் திட்டமாக இது இருக்க்கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications