அமித்ஷா சந்திப்பின்போது அக்ஷய் குமார் அணிந்த குர்தா.. முகலாய அரசி அறிமுகம் செய்ததாம் - வரலாறு என்ன?
டெல்லி: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உள்துறை அமித்ஷாவை சந்தித்தபோது முகலாய அரசி நூர்ஜஹான் வடிவமைத்த சிகாங்கரி குர்தாவை அணிந்திருந்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அக்ஷய் குமார் அளித்த பேட்டிதான்.
இயக்குநர் சந்திர பிரகாஷ் திவேதி இயக்கிய இந்திய மன்னர் பிருத்விராஜ் சௌகானின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான "சாம்ராட் பிருத்விராஜ்" இல் அக்ஷய் குமார் நாயகனாக நடித்துள்ளார்.
சாம்ராட் பிருத்விராஜ்
இன்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் தொடர்பாக கடந்த சில நாட்களாக ஊடகங்களுக்கு பேட்டியளித்து வந்தார் அக்ஷய் குமார். அப்போது ஒரு நேர்காணலில் பேட்டியளித்த அவர், "பாடபுத்தகங்களில் முகலாய மன்னர்கள் குறித்தே அதிக அளவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்து மன்னர்கள் குறித்து குறைவாகவே பாடபுத்தகங்களில் உள்ளது.
இந்து மன்னர்கள்
இந்து மன்னர்களின் வரலாறுகளையும், முகலாயர்களுக்கு இணையாக கல்வி அமைச்சகம் பாட புத்தகங்களில் சேர்த்திட வேண்டும். இந்திய அரசர்களை பற்றி வரலாற்று புத்தகங்களில் யாரும் எழுதவில்லை. அவர்கள் குறித்து நாம் எழுத வேண்டும். முகலாயர்கள் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்தான். ஆனால், இந்திய மன்னர்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
அமித்ஷா பேச்சு
இந்த நிலையில் சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு திரைப்படத்தை பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், 2014-ல் தான் கலாச்சார மறுமலர்ச்சிக்கான சகாப்தம் தொடங்கியது.
படையெடுப்புகள்
சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படம் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. இந்திய கலாச்சாரம் பெண்களை மதிக்கக்கூடியது. அவர்களின் வளர்ச்சிக்கு உதவியது. இந்த கதை ஆப்கானிஸ்தான் முதல் டெல்லி வரை பல போர்களில் கலந்துகொண்ட நாயகன் பற்றியது. நூற்றாண்டுகளாக படையெடுப்புகளுக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது." என்றார்.
சிகாங்கரி குர்தா
இந்த நிகழ்ச்சியின்போது அமித்ஷாவுடன் அக்ஷய் குமார் சிவப்பு நிற குர்தா அணிந்து நிற்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது. இதனை கண்ட பலர் அக்ஷய் குமார் அணிந்திருப்பது சிகாங்கரி வகை குர்தா என்று தெரிவித்து உள்ளனர். இதில் மேலும் ஒரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், இதை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் முகலாய பேரரசர் ஜஹாங்கிரின் மனைவி நூர்ஹஜான் தானாம்.
முகலாய அரசி நூர்ஜஹான்
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் பாரம்பரிய கலாச்சார பெருமைகளில் ஒன்றாக விளங்கும் இந்த சிகாங்கரி வகை குர்தா முழுக்க முழுக்க எம்பிராய்டிங் செய்யப்பட்டதாகும். பெர்ஷிய கலாச்சாரத்தின் அங்கமாக கருதப்படும் இந்த எம்பிராய்டிங் வகை சிகாங்கரி குர்தாவை அன்று நூர் ஜஹான் பிரபலப்படுத்தியதன் விளைவால், இன்று அது இந்திய உடையாக உருமாற்றம் பெற்றுள்ளது. இதை அக்ஷய் குமார் அணிந்தது விமர்சனத்துக்கு வழிவகுத்துள்ளது.