ஆஹா.. 100% உண்மைதானா! முன்கூட்டியே லோக்சபா தேர்தல்? கசிந்த பரபர தகவல்.. கவனிச்சீங்களா?
டெல்லி: அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதற்கு 100 சதவீதம் வலு சேர்க்கும் வகையில் தான் தற்போது மற்றொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த 2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. மேலும் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பார்த்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வேண்டும்.

ஆனால் ஆளும் பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் முன்கூட்டியே கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. இதற்கிடையே தான் தற்போது 2 முக்கிய தகவல்கள் வேகமாக பரவி இந்தியாவில் ‛டாக் ஆப் தி டவுன்' ஆக மாறியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் என்பது மத்திய அரசு வெளியிட்ட நேற்றைய அறிவிப்பு தான். அதாவது மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று, ‛‛நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும். இதில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்'' என அழைப்பு விடுத்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 11ம் தேதி தான் முடிவடைந்தது. இத்தகைய சூழலில் திடீரென நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டு இருப்பது என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இத்தகைய சூழலில் 2 முக்கிய மேட்டர் பரவி வருகிறது. முதல் தகவல் என்பது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் தான் ஒரே நாடு ஒரே தேர்தல்(நாடாளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல்) நடைமுறையை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு ஆர்வமாக இருப்பது வெட்டவெளிச்சமாகிறது. இருப்பினும் இந்த நடைமுறையை கொண்டு வருவதில் பல சவால்கள் உள்ளன. இதனால் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தாலும் கூட அதனை செயல்படுத்துவதில் கொஞ்சம் காலம் பிடிக்கலாம் என விபரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
சரி இதை விடுங்க.. 2வது மேட்டர் என்னவென்றால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மத்திய பாஜக அரசு மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஹாட்ரிக் முறையில் ஆட்சியை பிடிக்க ஆர்வமாக உள்ளது. ஆனால் ‛இந்தியா' என்ற பெயரில் 26 எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து இருப்பது பாஜகவுக்கு சவாலாக பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் ‛இந்தியா' கூட்டணி தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும் என்பதால் முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்லை பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவுகின்றனர்.
இதற்கிடையே தான் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என பரவும் தகவலுக்கு வலு சேர்க்கும் வகையில் இன்னொரு முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் அனைவரும் குழு போட்டோ எடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பொதுவாக லோக்சபா எம்பிக்கள் தேர்தலில் வென்று நாடாளுமன்றம் செல்லும்போது முதல் கூட்டத்திலும், அதன்பிறகு 5 ஆண்டு பதவிக்காலம் முடியும் நிலையில் இறுதியாக நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தான் குழு போட்டோக்கள் எடுப்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால் தற்போது சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எம்பிக்கள் குழு போட்டோவுக்கு ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல்கள் பரவி வருகிறது. அதன்படி இது இறுதி நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடராக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் எம்பிக்களின் குழு போட்டோ எடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முன்கூட்டியே லோக்சபா தேர்தல் நடக்கலாம் என்பதற்கு இந்த தகவல் வலு சேர்க்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications