மோடி நம்பர் 1... ராஜ்நாத் சிங்.. இல்லை.. அமித் ஷாதான் நம்பர் 2..!
டெல்லி: நரேந்திர மோடியின் 2வது ஆட்சியில் நம்பர் 2 அமைச்சராக உருவடுத்துள்ளார் உள்துறை அமைச்சரான அமித் ஷா.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக அமைந்துள்ளது. இந்த ஆட்சியில் உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அமித்ஷாவுக்கு மோடிக்கு அடுத்தபடியாக அனைத்திலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஆட்சியில் அமித்ஷாதான் இரண்டாம் இடம் என்னும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வென்றால் அடுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலும் பாஜக வென்றால் அடுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் என்று கூறியிருந்தார். அதற்கேற்றார்போல அமித்ஷாவுக்கு உள்துறை வழங்கப்பட்டது.
ஏற்கனவே உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத்சிங் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆட்சியில் பிரதமர் மோடிக்கு அடுத்த அதிகாரம் அமித்ஷாவுக்கு வரும் வகையில் அமைச்சரவையின் அனைத்துக் குழுக்களிலும் அவருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் 8 குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளனர்.
நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு, வீட்டு வசதி அமைச்சரவை குழு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழு, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவைக் குழு, வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டு அமைச்சரவைக் குழு என்று மொத்தம் எட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த எட்டுக்குழுக்களிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இடம் பெற்றுள்ளார். அதாவது பிரதமருக்கு அடுத்தபடியாக அமித்ஷாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்தப்படியாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7 குழுக்களில் இடம்பெற்றுள்ளார். ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 5 குழுக்களிலும் இடம் பெற்றுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 குழுக்களில் மட்டும் இடம் பெற்றுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக இரண்டு புதிய அமைச்சரவைக் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் குழுக்களில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நியமனங்கள் மூலம் மோடி அமைச்சரவையில் அமித் ஷாதான் நம்பர் டூ என்பது நிரூபணமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications