"சந்தேகமே வேண்டாம்.. லோக்சபா தேர்தலுக்கு முன் சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவோம்.." அமித் ஷா திட்டவட்டம்
டெல்லி: லோக்சபா தேர்தல் தொடர்பாகப் பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா தேர்தலுக்கு முன்பு சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
தேசிய தலைநகர் டெல்லியில் பிரபல ஆங்கில ஊடகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அமித் ஷா பல முக்கிய விஷயங்கள் குறித்துப் பேசினார்.

வரும் லோக்சபா தேர்தலில் பாஜக தனித்து 370 இடங்களிலும், எடிஏ கூட்டணி 400 இடங்களிலும் வெற்றி பெற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
அமித் ஷா: லோக்சபா தேர்தல் முடிவு குறித்து எந்த சஸ்பென்ஸும் இல்லை என்று கூறிய அவர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட தாங்கள் மீண்டும் எதிர்க்கட்சியில் தான் அமர வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமித் ஷா, "ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை நாங்கள் ரத்து செய்தோம்.
இப்படி மத்திய அரசு செய்த பல சாதனைகளைப் பட்டியலிட முடியும். இதனால் மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் பாஜகவுக்கு 370 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களுக்கும் மேல் கொடுப்பார்கள் என நம்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
கூட்டணி கணக்கு: பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பிராந்திய கட்சிகள் மூண்டும் என்டிஏ கூட்டணிக்குள் வருமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமித் ஷா, "நான் குடும்பக் கட்டுப்பாட்டை நம்புவேன்.. ஆனால் அரசியலில் இல்லை" என்று மறைமுகமாகப் பதிலளித்தார். அதாவது ஆளும் பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர வாய்ப்புள்ளது என்பதையே அவர் இப்படி குறிப்பிட்டுள்ளார். அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்ற போதிலும் எதுவும் இறுதியாகவில்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும் 2024 தேர்தல் என்பது பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு இடையேயான மோதல் இல்லை என்ற அவர், இது வளர்ச்சி மற்றும் வெற்று கோஷங்களைக் கொடுப்பவர்களுக்கு இடையிலான தேர்தலாக இருக்கும் என்று கூறினார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்த கேள்விக்கு, 1947-ல் நாட்டைப் பிரித்ததற்கு அவரது கட்சி காரணமாக இருக்கிறது.. அந்த நேரு வாரிசு இப்படி ஒற்றுமை யாத்திரையை நடத்த உரிமை இல்லை என்றார்.
இந்திய பொருளாதாரம்: தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இந்திய பொருளாதாரம் குறித்துத் தாக்கலான வெள்ளை அறிக்கை பற்றி பேசிய அவர், "காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நாட்டின் பொருளாதாரத்தில் எப்படியொரு குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் அதிகாரம் மக்களுக்கு இருக்கிறது. இதன் காரணமாகவே வெள்ளை அறிக்கையை வெளியிட்டோம்.
பொருளாதாரம் மிக மோசமாக இருந்தது. எல்லா துறைகளிலும் ஊழல் இருந்தது. அன்னிய முதலீடு வரவில்லை. அந்த நேரத்தில் நாங்கள் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருந்தால் அது உலகிற்கு ஒரு தவறான செய்தியைக் கொடுத்திருக்கும். ஆனால், 10 ஆண்டுகளில் பாஜக அரசு பொருளாதாரத்தை மீட்டெடுத்து, அன்னிய முதலீட்டைக் கொண்டு வந்துள்ளது, இப்போது ஊழல் எதுவும் இல்லை. எனவே வெள்ளை அறிக்கை வெளியிட இதுவே சரியான நேரம் என முடிவு செய்தோம்.
ராமர் கோயில்: அயோத்தியில் ராமர் கோயில் விவகாரத்தில் அரசியல் எதுவும் இல்லை.. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதே 500 ஆண்டுகளாக மக்களின் விருப்பமாக இருந்தது. இருப்பினும், ஒரு தரப்பைத் திருப்திப்படுத்தவும் சட்டம்- ஒழுங்கைக் காரணம் காட்டியும் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கப்படவில்லை. அந்த நிலையைத் தான் மாற்றினோம்" என்றார்.
சிஏஏ: தொடர்ந்து சிஏஏ மற்றும் பொது சிவில் சட்டம் குறித்துப் பேசிய அவர், "கடந்த 2019இல் சிஏஏ சட்டத்தை இயற்றினோம். இதற்கான விதிகளை வெளியிட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அதை அமல்படுத்துவோம். சிஏஏ குறித்து முஸ்லிம் சகோதரர்களிடம் தவறான தகவல்களைச் சொல்கிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவிற்கு வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க மட்டுமே சிஏஏ உள்ளது. இது யாருடைய இந்தியக் குடியுரிமையையும் பறிக்காது.
பொது சிவில் சட்டம் என்பது நமது நாட்டின் முதல் பிரதமர் நேரு உள்ளிட்டோர் செய்ய நினைத்தது. ஆனால், சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் அரசியல் காரணமாகக் காங்கிரஸ் கட்சியால் அதைச் செய்ய முடியவில்லை. இது தொடர்பாக அனைவரிடமும் விவாதிக்கப்படும். மதச்சார்பற்ற நாட்டில் மத அடிப்படையிலான சிவில் சட்டங்கள் இருக்க முடியாது," என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications