கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது வழக்கமான தீர்ப்பு அல்ல, “சிறப்பு கவனிப்பு”.. அமித் ஷா விமர்சனம்!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கையில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அது தொடர்பான விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார். சிபிஐ உடன் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் அண்மையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
வரும் ஜூன் 1ஆம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், அவரை ஜூன் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டுள்ளது. லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவும் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கெஜ்ரிவால் தற்போது தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், "இங்கே சிலர் 20 நாட்களுக்குப் பிறகு நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் 20 நாட்களுக்குப் பிறகு நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியின் போது, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக போதுமான வாக்குகள் பதிவானால், தான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது குறித்து அமித் ஷாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர், "இது உச்ச நீதிமன்றத்தின் மீதான தெளிவான அவமதிப்பு என்று நான் நம்புகிறேன். யாரேனும் வெற்றி பெற்றால், அவர்கள் குற்றவாளிகளாக இருந்தாலும் உச்ச நீதிமன்றம் அவர்களை சிறைக்கு அனுப்பாது என்று அவர் கூற முயற்சிக்கிறார். அவருக்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள், அவர்களின் தீர்ப்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது அல்லது ஜாமீன் எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை சிந்திக்க வேண்டும்."
மேலும் பேசிய அமித் ஷா, "சட்டத்தை விளக்குவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு உரிமை உள்ளது. இது ஒரு சாதாரண அல்லது வழக்கமான தீர்ப்பு அல்ல என்று நான் நம்புகிறேன். நாட்டில் பலர் இந்த வழக்கில் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்." எனத் தெரிவித்தார்.
திகார் சிறையில் கேமராக்கள் பொருத்தப்பட்டதாகவும், அது நேராக பிரதமர் அலுவலகத்திற்கு சென்றதாகவும் குற்றம்சாட்டிய அரவிந்த் கெஜ்ரிவாலின் கூற்றை மறுத்த அமித் ஷா, திகார் சிறை நிர்வாகம் டெல்லி அரசின் கீழ் உள்ளது என்றும், அவர் பொய் சொல்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அமித் ஷா, "அவரை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கெஜ்ரிவாலின் கட்சி 22 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. ஆனால், நாடு முழுவதும் மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் உத்தரவாதம் அளிக்கிறார். நீங்கள் 22 இடங்களில் மட்டுமே போராடுகிறீர்கள், முழு நாட்டிற்கும் உத்தரவாதம் அளிப்பீர்கள்" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications