இந்தி திணிப்பு சுத்தப் பொய்! மொழியின் பெயரில் விஷம் விதைக்கிறார் ஸ்டாலின் - அமித்ஷா கடும் தாக்கு
டெல்லி: மத்திய அரசு இந்தியை திணிப்பதாக பொய்யான தகவல்களை கூறி, தமிழகத்தில் மொழியின் பெயரால் திமுக விஷத்தை பரப்பி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லியில் மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய அமித்ஷா, திமுக தங்கள் ஊழல்களை மறைப்பதற்காகவே மொழிப் பிரச்சினையை கையில் எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், "மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிப்பதாக திமுகவினர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விஷத்தை பரப்புகின்றனர். அவர்கள் செய்யும் ஊழலை மறைக்கவே இந்த மொழி சர்ச்சையை கையிலெடுத்துள்ளனர்.
ஒவ்வொரு மொழியும் நாட்டின் அணிகலன் போன்றது. தென்னிந்திய மொழிகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் என்று திமுகவினர் சித்தரிக்க முயற்சிக்கிறார்களா? உங்கள் மொழியை வைத்து யார் அரசியல் செய்கிறார்களோ, அவர்களுக்கு ஒரு திட்டம் இருக்கிறது.
மொழியின் பெயரைச் சொல்லி நாட்டை பிரிக்க திமுக முயற்சிக்கிறது. பொறியியல், மருத்துவத் துறை தேர்வுகளை தமிழில் மொழிபெயர்க்க தமிழக அரசுக்கு தைரியம் கிடையாது. ஆனால், மொழியின் பெயரில் விஷத்தை மட்டும் பரப்புகிறார்கள்." என்று காட்டமாக தெரிவித்தார்.
மேலும், "ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒரு மொழியை (ஆங்கிலம்) நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் இந்திய மொழிகளை உங்களுக்கு பிடிக்கவில்லை. மும்மொழிக் கொள்கையை நீங்கள் கையில் எடுத்திருப்பது உங்கள் தவறுகளையும், நீங்கள் செய்த ஊழல்களையும் மறைப்பதற்காகத்தான்.
தமிழகத்தில் நீங்கள் கடந்த 4 ஆண்டுகளில் செய்த சாதனைகளையும், வளர்ச்சியையும் பற்றி பேசுங்கள். அப்போது நாங்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவோம்," என்று அமித்ஷா சவால் விடுத்தார்.
புதிய தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிப்பதாக திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், அமித்ஷாவின் இந்த கருத்துக்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே, எத்தனை கோடி கொடுத்தாலும் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தமிழக பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீட்டிற்கு பதிலாக தமிழ் எழுத்தான 'ரூ' பயன்படுத்தப்பட்டதும், கருணாநிதி நூற்றாண்டு நாணயங்களில் ₹ அச்சிடப்பட்டிருப்பதும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால் மட்டுமே கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது?" என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், "தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியல் உள்நோக்கத்துடன் பேசுவதாக மத்திய கல்வி அமைச்சர் கூறுவதை வன்மையாக கண்டிக்கிறோம்," என்று தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமித்ஷாவின் இந்த காட்டமான விமர்சனங்கள், குறிப்பாக "விஷம்" என்ற வார்த்தையை பயன்படுத்தியது, தமிழக அரசியல் களத்தில் மேலும் சூட்டை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications