நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்.. மே 4 ஆம் தேதி தேர்வு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
டெல்லி: எம்பிபிஎஸ், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 4 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது.
எம்பிபிஎஸ்., மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான நீட் எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மிகப்பெரிய நுழைவுத் தேர்வாகக் கருதப்படும் நீட் தேர்வை மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இளநிலை நீட் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். 2025 ஆம் ஆண்டு இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு துவங்கப்பட்டுள்ளதாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 7 ஆம் தேதி நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. இத்தேர்வுக்கு பதிவு செய்ய மார்ச் 7 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மார்ச் 7 ஆம் தேதி தேர்வுக் கட்டணம் செலுத்தவதற்கான கடைசி நாளாகும். மே 1 ஆம் தேதி தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்படவுள்ளது.
இளநிலை நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறவுள்ளது. மதியம் 2:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ. 1,700, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் ரூ.1,600, எஸ்சி/எஸ்டி/3ம் பாலினத்தவர்கள்: ரூ.1000 மற்றும் வெளிநாட்டினர் ரூ.9,500 தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications