ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்க பணி.. உடனே நிறுத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி: ஆரவல்லி மலைத்தொடரின் திருத்தப்பட்ட வரையறை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தனது முந்தைய வழிகாட்டுதல்களை நிறுத்தி வைத்துள்ளது.
நிபுணர் குழு அறிக்கை மற்றும் நீதிமன்ற கருத்துக்கள் தவறாகப் பொருள் கொள்ளப்படுவதாக கவலை தெரிவித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, ஏ.ஜி. மாசி அடங்கிய அமர்வு, இந்த உத்தரவைப் பிறப்பித்தது. ஜனவரி 21 அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் தெரிவித்திருக்கிறது.

வழக்கின் பின்னணி
ஆரவல்லி மலை என்பது டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் வரை பரவியிருக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்த மலையின் பாதுகாக்கப்பட்ட பகுதி எது என்பதில், வெவ்வேறு விதமான வரையறைகள் இருக்கின்றன. எனவே இந்த வரையறைகளை ஆரவல்லி மலைத்தொடர் அனைத்துக்கும் சேர்ந்து ஒன்றாக வரையறுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மலைத்தொடர் எனில் எது? என புதிய வரையைறையை கொடுத்தது.
புதிய வரையறை
அதன்படி, தரை மட்டத்திலிருந்து சுமார் 100 மீ உயரம் அல்லது அதைவிட உயரம் அதிகம் கொண்ட பகுதிகள் மட்டும்தான் ஆரவல்லி மலைத்தொடர் என்று வரையறுத்திருந்தது. அதேபோல இரண்டு குன்றுகளுக்கு இடையில் குறைந்தது 500 மீ இடைவெளி இருந்தால்தான் அது மலைத்தொடர் என கருதப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
சுரங்க தொழில்
இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருப்பதை போல தோன்றும். ஆனால், மொத்தமுள்ள 12,081 குன்றுகளில் அரசு சொன்ன வரையறைக்குள் வெறும் 1,048 குன்றுகள் மட்டுமே வரும். எனவே சூழலியல் ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புக்கு மத்தியில் இந்த வரையறையை பரிந்துரைகளாக கடந்த நவம்பர் மாதம் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன்படி 100 மீ.க்கும் உயரம் குறைவாக உள்ள குன்றுகளை சுரங்க தொழிலுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவு
இப்படி இருக்கையில்தான் நவம்பர் மாத உத்தரவையும், அரசின் பரிந்துரைகளையும் தற்போது உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவுகள் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும், 12,081 குன்றுகளில் வெறும் 1,048 குன்றுகள் மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டியவையா? என்றும் நீதிமன்றம் சந்தேகித்திருக்கிறது.
நிலத்தடி நீர்
உத்தரவை நிறுத்தி வைத்திருப்பது மட்டுமல்லாது உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி இந்த குழு, 100 மீ விதியால் பெரும்பாலான குன்றுகள் பாதுகாக்கப்படாதா? என்பதை ஆய்வு செய்யும். பாதுகாக்கப்பட்ட பகுதியிலிருந்து சில இடங்களுக்கு விலக்கு அளிப்பது சரியானதா? புதிய வரையறையால் நிலத்தடி நீர் பாதிக்குமா? என்பதையும் ஆய்வு செய்யும்.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மீண்டும் ஜன.21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆரவல்லியில் எந்தவிதமான சுரங்க பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்று மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications