பாஜகவின் மோசமான வாக்கு வங்கி அரசியல்.. CAAவை கடுமையாக விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால்! காரணம் இதுதான்
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், இந்த சட்டம் முழுக்க முழுக்க வாக்கு வங்கி அரசியலுக்காகவே கொண்டுவரப்பட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிஏஏ: கடந்த 1955ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தின்படி, இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்க அச்சட்டம் வழிவகுத்தது. அதில் திருத்தம் செய்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்கு குடியுரிமை வழங்க தற்போது இப்புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகுத்துள்ளது.

விமர்சனம்: இசுலாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திருத்தச்சட்டம் மூலம் இந்நாட்டின் அடித்தளமான மதச்சார்பின்மைக் கோட்பாடே முற்றுமுழுதாக துடைத்தெறியப்படும் என எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை விமர்சித்துள்ளன. இந்த சட்டத்தின் மூலம் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை தற்போது வழங்கப்படாது என்பதால், தமிழ்நாட்டில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு நிலவி வருகிறது.
போராட்டம்: புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் உட்பட 16 கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்தன. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவால்: இந்நிலையில் சிஏஏ முழுக்க முழுக்க வாக்கு வங்கி அரசியலுக்காக கொண்டுவரப்பட்டதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"நமது நாட்டின் அரசியல் சூழலை கொஞ்சம் உற்று பாருங்கள். வேலையின்மை பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஆனால், ஹரியானா அரசு இளைஞர்களை போர் நடக்கும் இஸ்ரேல் எல்லைக்கு அனுப்பி வைக்கிறது. மறுபுறம் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு குடியுரிமை கொடுக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்கான தேவை என்ன?
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தனது கடமையை சரியாக நிறைவேற்றாத காரணத்தினால்தான் தற்போது சிஏஏ-வை அமல்படுத்துகிறது. இதன் மூலம் பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமையுடன் சேர்த்து வாக்குரிமையும் வழங்கப்படும். இது வாக்கு வங்கியாக மாற்றப்படும். வெளிநாடுகளை சேர்ந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசு வேலை வழங்கும். இருப்பவர்களுக்கே இங்கு வேலை இல்லாதபோது சிஏஏ ஏன் வேண்டும்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications