ஆர்யன் கான் வழக்கை விசாரித்து.. சர்ச்சையில் சிக்கிய அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடமாற்றம்!
டெல்லி: ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் விசாரணை நடத்திய போதைப்பொருள் அதிகாரி சமீர் வான்கடே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக். மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பார்டி நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டன.
சமீபத்தில் தான் இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கான் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், விசாரணை சமயத்தில் இந்த வழக்கில் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வந்தது.

சமீர் வான்கடே
இந்தச் சூழலில் போதைப்பொருள் வழக்கில் இருந்து ஆர்யன்கானை விடுவிக்க என்சிபி அதிகாரிகள் ஷாருக் கானிடம் பேரம் பேசியதாகவும் இதில் மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கும் தொடர்பு இருப்பதாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவர் ஆர்யன் கான் வழக்கிலிருந்து நீக்கப்பட்டு, மும்பை என்.சி.பி., தலைமையகத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

சென்னைக்கு மாற்றம்
மேலும், மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்த வந்த 6 கேஸ்களும் என்சிபி உயர் அதிகாரி சஞ்சய் சிங் தலைமையிலான சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. சமீபத்தில் ஆர்யன் கானும் போதைப்பொருள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை முறையாக விசாரிக்கத் தவறிய முன்னாள் என்சிபி அதிகாரி சமீர் வான்கடே சென்னையில் உள்ள வரி சேவை இயக்குநரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மத்திய அரசு
இவர் மீது போலி சாதி சான்றிதழை அளித்து வேலைக்குச் சேர்ந்ததாகவும் புகார் உள்ளது. இதனிடையே போதைப்பொருள் வழக்கு விசாரணையை முறையாக நடத்தத் தவறி வான்கடே மீது நடவடிக்கை எடுக்குமாறு சமீபத்தில் மத்திய அரசு நிதி அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டு இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் இப்போது சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆர்யன் கான் வழக்கில் இவரது விசாரணையில் 5 முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஐந்து பிழைகள்
முதலில் சொகுசு கப்பலில் தேடுதல் வேட்டையின்போது வீடியோ பதிவு செய்யப்படவில்லை. மேலும், ஆர்யன் கானின் மொபைலை ஆய்வு செய்வதிலும் முறையான விதிகள் பின்பற்றப்படவில்லை. அடுத்து கைது செய்யப்பட்டோர் போதைப் பொருட்களை எடுத்துக் கொண்டனரே என்பதை நிரூபிக்க மருத்துவ சோதனைகள் செய்யப்படவில்லை.

முக்கிய பிரச்சினை
மேலும் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சிலர் பிறழ் சாட்சியாக மாறினர். இவை அனைத்தையும் விட ஆர்யன் கான் போதைப்பொருள் இல்லாமல் கைது செய்யப்பட்ட போதிலும், குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீது ஒரே மாதிரியான வழக்குக்குள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இந்த 5 காரணங்கள் தான் போதைப்பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கான் விடுதலையாக முக்கியமாக அமைந்து இருந்தது.












Click it and Unblock the Notifications