ராகுல் காந்தி வரிசையில்.. மேலும் ஒரு எம்பி தகுதி நீக்கம்! அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டு சிறை ஏன்?
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பகுஜன் சமாஜ் கட்சி எம்பி அப்சல் அன்சாரியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த தகுதி நீக்கம் ஏன்? விரிவாக பார்போம்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகா மாநிலம் கோலாரில் மோடியின் சாதி பெயர் குறித்து பேசினார். இதன் மூலம் ராகுல் காந்தி மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாக கூறி குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சுமார் 4 ஆண்டுகளாக சூரத் நீதிமன்றத்தில் விசாரணையி இருந்து வந்தது. கடந்த மார்ச் 23 ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா முன் விசாரணைக்கு வந்தது. இந்த அவதூறு வழக்கை விசாரித்த நீதிபதி ராகுல் காந்தியை குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவதூறு வழக்கு தொடர்பாக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியது. இந்த நிலையில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தால் எம்பி பதவியில் இருந்தே ராகுல் காந்தி நீக்கப்பட்டார்.
இதேபோல் மேலும் ஒரு எம்பி தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அப்சல் அன்சாரியைதான் தற்போது தகுதி நீக்கம் செய்து உள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு பாஜக எம்எல்ஏ கிருஷ்ண ஆனந்த் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்சல் அன்சாரி மற்றும் அவரது சகோதரர் முக்தார் அன்சாரி மீது குற்றம்சாட்டப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதத்தையும் விதித்தது. அதேபோல் பஅப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.
2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்திக்கு எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால் அப்சல் அன்சாரியும் எம்பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். எம்பி, எம்எல்ஏக்களாக உள்ளவர்கள் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications