காங். கூட்டணிக்கு ஷாக் கொடுத்த மாயாவதி-அகிலேஷ் யாதவ் அறிவிப்பு.. பாஜக செம ஹேப்பி
டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவை மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை எதிர் கொள்வதாக அறிவித்துள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள், இம்முறை பாஜகவை எதிர்ப்பதற்காக இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்தன.
இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமில்லை என்றும் இரு கட்சித் தலைவர்களும் அறிவித்திருந்தனர்.
காங்கிரசுக்கு ஷாக்
இந்தச் சூழ்நிலையில் இன்று காங்கிரஸ் கூட்டணிக்கு மற்றொரு பேரிடியாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அண்டை மாநிலங்களான மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றிலும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகளில், 3 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியும், எஞ்சிய தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு
உத்தராகண்ட்டில், 5 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அங்கு சமாஜ்வாதி கட்சி, ஒரு தொகுதியிலும், பகுஜன் சமாஜ் கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோர் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
பாஜகவுக்கு ஆதாயம்
பாஜகவை எதிர்ப்பதற்கு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.. அப்போதுதான் எளிதாக வெற்றி பெற முடியும் என்று காங்கிரஸ் தலைமை கருதிய நிலையில், முக்கியமான கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி ஆகியவை, உத்தரபிரதேசம் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸை தவிர்த்துவிட்டு கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வாக்குகள் சிதறி பாஜகவுக்கு ஆதரவாக அது செல்லக் கூடும் என்பது அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது.