கோவாக்சின் தடுப்பூசிக்கு நிபுணர் குழு பச்சைக் கொடி.. கோவிஷீல்டையடுத்து 2வது தடுப்பூசிக்கு ஓகே
டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் 'கோவாக்சின்' என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசி, அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய சிறப்பு நிபுணர் குழு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்தக நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் பாரத் பயோடெக் ஆகியோரால் உருவாக்கப்பட்ட 'கோவிஷீல்ட்' தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் நிறுவனம். இதேபோல பாரத்பயோடெக் நிறுவனம், தங்களின் 'கோவாக்சின்' தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் கூட்டு சேர்ந்து உருவாக்குகிறது. அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியும் இந்தியாவில் அனுமதி கோருகிறது.

இந்த நிலையில், நேற்று மற்றும் இன்று தொடர்ந்து தடுப்பூசிகளுக்கான அனுமதி வழங்குவது தொடர்பான ஆய்வுகளை நிபுணர் குழு மேற்கொண்டு வந்தது.
கோவிஷீல்டு தடுப்பூசி, அவசரகால பயன்பாட்டுக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் கோவிஷீல்டு தடுப்பு மருந்து நிறுவனம் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி கிடைத்து விட்டால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அந்த தடுப்பூசி வந்துவிடும்.
இந்த நிலையில்தான், ஹைதராபாத்தை சேர்ந்த மற்றும் பாரத் பயோடெக் மற்றும் ஐசிஎம்ஆர் ஆகியவை இணைந்து தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசிக்கு நிபுணர் குழு சம்மதம் தெரிவித்துள்ளது. மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பிடம் அனுமதி பெற்ற பிறகு இந்த தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
இதுவரை, இந்தியாவில் எந்த ஒரு தடுப்பு மருந்துக்கும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கவில்லை. இதனிடையே கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு அதை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நாடு முழுக்க இன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications