மோடி பதவி ஏற்பு - ’பிம்ஸ்டெக்’ , கிர்கிஸ்தானுக்கு அழைப்பு! பாகிஸ்தானுக்கு ‘நோ’
டெல்லி: நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்வில் பிம்ஸ்டெக் (வங்காள விரிகுடாவை சார்ந்த நாடுகள்) அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் மற்றும் கிர்கிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
2014 லோக்சபா தேர்தலில் பாஜக வென்று முதல் முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். அப்போது இலங்கை உள்ளிட்ட சார்க் அமைப்பில் இடம்பெற்ற நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. தற்போதைய லோக்சபா தேர்தலிலும் பாஜக வென்று மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.
டெல்லியில் நாளை மறுநாள் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். இம்முறை மோடியின் பதவி ஏற்பு விழாவில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ள இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் தங்களுக்கிடையே பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை பரிமாறிக் கொள்ள இந்த பிம்ஸ்டெக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க கிர்கிஸ்தான், மொரீஷியஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications