ராணுவத்தில் நிபுணத்துவம் பெற்ற பிபின் ராவத்.. வகித்த பதவிகள் என்னென்ன?.. வாழ்க்கை குறிப்பு!
டெல்லி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு செல்ல முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள் கோவைக்கு வந்தனர். சூலூரிலிருந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு எம்ஐ ரக ஹெலிகாப்டரில் அவர்கள் சென்றனர்.
Recommended Video
வெலிங்கடன் பயிற்சி மைய ஹெலிபேடை நெருங்க 10 கி.மீ. தூரம் இருந்த நிலையில் காட்டேரி எனும் அடர்ந்த காட்டு பகுதி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தந்தை பணியாற்றிய பிரிவில்..
பிபின் ராவத்தின் முழு பெயர் பிபின் லக்ஷ்மண் சிங் ராவத் என்பதாகும். தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் இந்திய இராணுவ அகாடமி (IMA) ஆகியவற்றில் பட்டம் பெற்ற பிறகு, பிபின் ராவத் 1978 டிசம்பரில் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டார். 11-வது கோர்க்கா ரைபிள்ஸின் ஐந்தாவது பட்டாலியனாக அவரது தந்தை இருந்த நிலையில் அதே பிரிவில் பிபின் ராவத்தும் சேர்க்கப்பட்டார்.

பல்வேறு பொறுப்புகள்
இந்திய ராணுவத்தில் பிரிகேட் கமாண்டர், ஜெனரல் ஆபீசர் கமாண்டிங்-இன்-சீஃப் (ஜிஓசி-சி) தெற்கு கமாண்ட், ஜெனரல் ஸ்டாஃப் ஆபிசர் கிரேடு 2, ராணுவ நடவடிக்கை இயக்குனரகம், கர்னல் ராணுவச் செயலர் மற்றும் துணை ராணுவச் செயலர் ஆகிய மிகப்பெரிய பதவிகளை பிபின் ராவத் வகித்துள்ளார். இராணுவச் செயலாளரின் கிளை மற்றும் ஜூனியர் அதிகார கட்டளைப் பிரிவில் மூத்த பயிற்றுவிப்பாளராகவும் இருந்துள்ளார்.

முப்படைகளின் தலைமை தளபதி
கோர்க்கா படைப்பிரிவில் இருந்து நான்காவது அதிகாரியாக ஆவதற்கு முன்பு, அவர் ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் ஒருங்கிணைந்த பகுதியில் ஒரு உறுப்பினராகவும், காங்கோ ஜனநாயகக் குடியரசில் பன்னாட்டுப் படையணிக்கு தலைமையும் தாங்கியுள்ளார். டிசம்பர் 17, 2016 அன்று ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக்கிற்குப் பிறகு நாட்டின் 27-வது இராணுவத் தளபதியாக பிபின் ராவத் பதவியேற்றார். அதன்பின்னர் அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் 2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் முதன் முதலில் இந்தியாவில் அந்த பதவி உருவாக்கப்பட்டது.

நிபுணத்துவ செயல்பாடு
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் உட்பட இந்தியாவின் பயங்கரவாதிகள் அச்ச்சுறுத்தல் உள்ள மிகவும் ஆபத்தான பகுதிகளில் பணியாற்றியுள்ள ராவத் ராணுவ துறையில் தனது விரிவான நிபுணத்துவ செயல்பாட்டுக்கு பெயர் போனவர். 2015-ம் ஆண்டு இந்திய-மியான்மர் எல்லையில் தாக்குதல் நடத்திய NSCN-K கிளர்ச்சியாளர்களுக்கு எல்லை தாண்டி இந்திய இராணுவம் வெற்றிகரமாக பதிலடி கொடுத்தது பிபின் ராவத்தின் சிறப்பான நடவடிக்கையில் ஒன்றாகும்.

2 மகள்கள்
பிபின் ராவத் தனது திறமையான சேவைக்காக பரம் விசிஷ்ட் சேவா, உத்தம் யுத் சேவா, அதி விஷிஷ்ட் சேவா, விசிஷ்ட் சேவா, யுத் சேவா மற்றும் சேனா உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் ஆவார். இவர்களுக்கு கிருத்திகா ராவத் என்பவர் உள்ளிட்ட 2 மகள்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications