தர்மருக்கு “ஹேப்பி பர்த் டே”.. ராஜ்யசபா கூடியவுடன் பிறந்தநாள் வாழ்த்து! நெகிழ்ந்த ஓபிஎஸ் ஆதரவு எம்பி
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று மாநிலங்களவையில் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக எம்பி ஆர்.தர்மருக்கு அவை மரபுப்படி பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருடன் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி சுகேந்து சேகர் ராய்க்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதானி விவகாரம், லண்டனில் ராகுல் காந்தி ஆற்றிய உரை, ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்பு போன்ற விவகாரங்களால் இரு அவைகளிலும் தொடர்ந்து அனல் பறந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவை கூடிய உடனே அதானி விவகாரத்தை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கிளப்ப தொடங்கினார்கள்.
எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான எம்பிக்கள் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரினர். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்பிக்களும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் நீடித்தது. அப்போது அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று விவாதிக்கப்படும் விவகாரங்கள் பட்டியலிடப்படும் வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதானி விவகாரம்
அதன் பின்னர் எதிர்க்கட்சி எம்பிக்கள் "மோடி அதானி பாய் பாய்" என்று முழக்கங்களை எழுப்பி நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரினர். அப்போது அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மாநிலங்களவையை ஒத்திவைக்கக்கோரி மல்லிகார்ஜுன கார்கே வழங்கிய நோட்டீசை வாசித்தார்.
அப்போது ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையின் மையப் பகுதிக்கு சென்று முழக்கங்களை எழுப்பினார். அவருடன் மேலும் சில காங்கிரஸ் எம்பிக்களும் இணைந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர். அத்துடன் சில காங்கிரஸ் எம்பிக்கள் கருப்பு நிற சட்டை அணிந்து அவைக்கு வந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஆர்.தர்மருக்கு பிறந்தநாள் வாழ்த்து
இதனால் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு எச்சரிக்கை விடுத்தார். அதை தொடர்ந்து அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார். முன்னதாக அதிமுக ஓபிஎஸ் ஆதரவு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.தர்மர் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் ஆகியோருக்கு அவை மரபுப்படி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்த புளியங்குடி என்ற கிராமத்தில் பிறந்த தர்மர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்.

ஓபிஎஸ் - இபிஎஸ் விரிசல்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகத்துடன் இவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்வின்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே விரிசல் துளிர்விடத் தொடங்கியது.
ஆர்.தர்மருக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டை பெற்றுத் தருவதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருந்தார். ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அதிமுக தலைவராக பதவி வகித்த ஆர்.தர்மர் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணியிலேயே செயல்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications