தெற்கை நம்பி காங்கிரஸும்.. வடக்கு நோக்கி தவமிருக்கும் பாஜகவும்... இவங்களை நம்பி இன்னொரு குரூப்பும்!
டெல்லி: வடக்கை நம்பி பாஜகவும், தெற்கை நம்பி காங்கிரசும் உள்ளன. மூன்றாம் அணியாக வெளியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஜுஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள், இவர்களின் மீது குதிரை ஏறி ஆட்சி அமரும் மிதப்பில் இருக்கின்றன. பிரதமர் கனவு என்பது யாருக்கு பலிக்கும் என்பது மே 23ல் தெரிந்துவிடும்.
இந்தியாவில் மொத்தம் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன.இதில் தமிழகம் (39), ஆந்திரா(25), தெலுங்கானா (17), கேரளா (20), கர்நாடகா (28), புதுச்சேரி (1) உள்ளிட்ட தென்மாநிலங்களில் மொத்தம் 130 மக்களவை தொகுதிகள் உள்ளன. மீதமுள்ள தொகுதிகள் வட மாநிலங்களில் உள்ளன.
கர்நாடகாவில் மதசார்பாற்ற ஜனதா தளம், கேரளாவில் வலுவான நிலை, தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி, ஆந்திராவில் நாயுடுவின் உதவி, தெலுங்கானாவில் எதிர்க்கட்சி போன்ற காரணங்களால் இந்த முறை தென் மாநிலங்களில் அதிக இடங்களில் வெல்ல முடியும் என்று காங்கிரஸ் கணக்கு போட்டுள்ளது.

ராஜஸ்தான்
இதேபோல் வடமாநிலங்களில் ராஜஸ்தான் (25), சத்தீஷ்கர் (11), மத்திய பிரதேசம் (29), இமாச்சல பிரதேசம் (4), பஞ்சாப் (13), பீகார் (40), உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிக இடங்களில் வெல்லுவோம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது.

பாஜக நம்பிக்கை
அதேநேரம் இந்தியாவின் அதிக தொகுதிகளை கொண்ட (80) உத்தரப்பிரதேச மாநிலம், குஜராத் (26), மகாராஷ்டிரா (48), அரியானா(10), டெல்லி (7), பீகார் (40), மத்திய பிரதேசம்(29), ஜார்க்கண்ட் (14), மகாராஷ்டிரா (48) உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிக செல்வாக்கு இருப்பதாக நம்பும் பாஜக அங்கு மிகப்பெரிய அளவில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

கைகொடுக்கும்
இதேபோல் வடகிழக்கு மாநிலங்கள் (25 தொகுதிகள்) மற்றும் மேற்கு வங்கத்தில் (42) இந்த முறை தங்களுக்கு பெரிய அளவில் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது.

பாஜக-காங் நம்பிக்கை
இதன்படி பாஜக கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் தலா 200 இடங்களுக்கு மேல் வெல்வோம் என்று உறுதியாக நம்புகின்றன. இந்த இரண்டு கட்சிகளுமே தேர்தலுக்கு பிறகான கூட்டணியையே பெரிதும் நம்புகின்றன.

யார் நம்பிக்கை?
இந்நிலையில் இந்தமுறை மெஜாரிட்டி கிடைப்பது கடினம் என்பதால் மூன்றாம் அணியாக வெளியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஜுஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள், புதிய அரசை தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம் என்று நம்புகின்றன. யார் நம்பிக்கை வெல்லும் என்பது மே 23 ம் தேதி தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications