"ஜெபி நட்டா என்னும் நான்.." மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சர் ஆனார் நட்டா!
டெல்லி: நரேந்திர மோடி தலைமையில் இன்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் மத்திய அமைச்சரவையில் ஜெ.பி.நட்டா இடம்பெற்றுள்ளார். மத்திய அமைச்சராக ஜெபி நட்டா பதவியேற்றுக் கொண்டார்.
பாஜகவின் தேசியத் தலைவராக உள்ள ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், அவர் பிரதமர் நரேந்திர மோடியின் 3வது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்றதை அடுத்து, நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். பதவியேற்பு நிகழ்வு இன்று டெல்லியில் இரவு 7:15 மணிக்கு தொடங்கியது. பிரதமர் மோடியுடன் சுமார் 30 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று வருகின்றனர்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கும் நிகழ்வில், உலக நாடுகளின் தலைவர்கள் பாஜக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பல்துறை பிரபலங்கள் உட்பட 8,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மோடி தலைமையிலான அமைச்சரவையில் பாஜகவின் மூத்த தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், நிர்மலா சீதாராமன், மன்சுக் மாண்டவியா ஆகியோருக்கு முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் பாஜக தலைவர்கள் எல்.முருகன், சர்பானந்தா சோனோவால், மனோகர் லால் கட்டார், சிவராஜ் சிங் சவுகான், பண்டி சஞ்சய் குமார், ரவ்னீத் சிங் பிட்டு, சி.ஆர்.பாட்டீல், ஜோதிராதித்ய சிந்தியா, ராவ் இந்தர்ஜித் சிங், நித்யானந்த் ராய், பகீரத் சவுத்ரி மற்றும் ஹர்ஷ் மல்ஹோத்ரா, ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங் ஷெகாவத், ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் லாலன் சிங் மற்றும் ராம்நாத் தாக்கூர், கிரிராஜ் சிங் மற்றும் நித்யானந்த் ராய், எச்ஏஎம் தலைவர் ஜிதன் ராம் மஞ்சி, லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான், ஜிதின் பிரசாதா, லட்சுமி காந்த் பாஜ்பாய் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடம்பெற உள்ளனர்.
அனுராக் தாகூர், ஸ்மிருதி ராணி, அர்ஜூன் முண்டா ஆகிய மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. கேபினட் அமைச்சர்களாக இருந்த 8 பேர், இணையமைச்சர்களாக இருந்த 27 பேர் புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டாவும், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இந்த மாதத்துடன் பாஜக தேசியத் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், அவர் கேபினட்டில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது.
பாஜக தேசிய தலைவர் பொறுப்பில் இருந்து விலக உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பிக்களுக்கு தனது இல்லத்தில் இன்று இரவு விருந்து அளிக்க உள்ளார் ஜெபி நட்டா. ஜெபி நட்டாவுக்கு பதிலாக பாஜக தேசிய தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
யார் இந்த நட்டா?: இமாச்சல பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட ஜெகத் பிரகாஷ் நட்டா, கடந்த 1960ஆம் ஆண்டு, பீகாரில் உள்ள பாட்னாவில் பிறந்தவர். பாட்னா பல்கலைக்கழகத்தில் பி.ஏ முடித்த பிறகு, இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி படித்தார். தனது இளம் வயதில் ஜெய் பிரகாஷ் நாராயணின் இயக்கங்களில் தீவிரமாக பங்கேற்றார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ஏ.பி.வி.பி) இணைந்து செயல்பட்டு வந்தார். கடந்த 1989இல் ஏ.பி.வி.பி-யின் தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1991 இல், பாஜக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 1993 ஆம் ஆண்டில், அவர் முதன்முறையாக இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இமாச்சல பிரதேச எதிர்க்கட்சித் தலைவரானார். கடந்த 1998இல் மீண்டும் சட்டரப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இமாச்சல் பிரதேச பாஜக அரசில் சுகாதாரத்துறை அமைச்சரானார்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2012இல் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு, தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெற்றது. இச்சூழலில், அண்மையில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் குஜராத் மாநிலத்தில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஜேபி நட்டா.
இதற்கிடையே கடந்த 2019ஆம் ஆண்டு, ஜூன் மாதம், ஜேபி நட்டா, பாஜகவின் தேசிய செயல் தலைவராகவும், 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், பாஜகவின் தேசியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில், அவர் மத்திய அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications